பயிற்சியின்போது ஹெலிகாப்டர் விபத்து - 5 அமெரிக்க கடற்படை வீரர்கள் பலி


பயிற்சியின்போது ஹெலிகாப்டர் விபத்து - 5 அமெரிக்க கடற்படை வீரர்கள் பலி
x

கோப்புப்படம் 

கலிபோர்னியாவின் பைன் பள்ளத்தாக்கில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பயிற்சியின் போது ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை கிரீச் விமானப்படை தளத்திலிருந்து வழக்கமான பயிற்சிக்காக CH-53E சூப்பர் ஸ்டாலியன் ஹெலிகாப்டரில் கடற்படையினர், மரைன் கார்ப்ஸ் விமான நிலைய மிராமருக்கு சென்றனர். இந்த நிலையில் ஹெலிகாப்டர் திடீரென காணாமல் போனது. இதையடுத்து ஹெலிகாப்டரை தேடும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில் புதன்கிழமை காலை 9:08 மணியளவில் கலிபோர்னியாவின் பைன் பள்ளத்தாக்கில் மலையில் மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் விபத்தில் 5 கடற்படை வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மேஜர் ஜெனரல் மைக்கேல் ஜே. போர்க்சுல்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹெலிகாப்டர் பயிற்சியின்போது, 3டி மரைன் ஏர்கிராப்ட் விங் மற்றும் பறக்கும் புலிகள் பிரிவுகளைச் சேர்ந்த 5 சிறந்த கடற்படை வீரர்கள் உயிரிழந்ததை மிகவும் கனத்த இதயத்துடனும் ஆழ்ந்த சோகத்துடனும் பகிர்ந்து கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த கடற்படையினரின் உடல்கள் மற்றும் உபகரணங்களை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது.


Next Story