அடுத்தடுத்து குண்டு வெடிப்பு.. அதிர்ந்த ஈரான் - பலி எண்ணிக்கை 100- ஐ தாண்டியது


தினத்தந்தி 3 Jan 2024 1:31 PM GMT (Updated: 4 Jan 2024 7:16 AM GMT)

கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்கா நடத்திய டிரோன் தாக்குதலில் பலியான காசிம் சுலைமானியின் நினைவு நாள் இன்று அந்த நாட்டில் அனுசரிக்கப்பட்டது.

பாக்தாத்,

கடந்த 2020-ம் ஆண்டு அமெரிக்காவின் டிரோன் தாக்குதலில் ஈரானின் புரட்சிப் படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் அமெரிக்கா மீது ஈரான் கடும் கோபத்தை வெளிப்படுத்தியது. ஆனால் சுலைமான் படுகொலையை அமெரிக்கா அப்போது நியாயப்படுத்தியது. குறிப்பாக அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் இதை நியாயப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில், ஈரானின் கெர்மானில் உள்ள காசிம் சுலைமான் கல்லறையில் இன்று நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இதற்காக பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் அஞ்சலி செலுத்த இன்று கூடியிருந்தனர். அப்போது அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவங்களில் தற்போது வரை 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் படுகாயமடைந்த நிலையில் 173 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈரானில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த குண்டு வெடிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.


Next Story