அமெரிக்காவில் மக்கள் கூட்டத்தில் திடீர் துப்பாக்கி சூடு; 7 பேர் காயம்


அமெரிக்காவில் மக்கள் கூட்டத்தில் திடீர் துப்பாக்கி சூடு; 7 பேர் காயம்
x

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.



புளோரிடா,



அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஆர்லேண்டோ நகரில் மக்கள் கூட்டத்தில் திடீரென ஒருவருக்கொருவர் மோதல் ஏற்பட்டு வன்முறை பரவியது. இதில், அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்து கூட்டத்தினரை நோக்கி சுட்டுள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டில் 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் நிலை சீராக உள்ளது என ஆர்லேண்டோ போலீஸ் தலைவர் எரிக் ஸ்மித் கூறியுள்ளார். துப்பாக்கி சூடு நடத்திய நபரை பற்றிய உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

நடப்பு ஆண்டில், அமெரிக்காவில் பெரிய அளவில் 381 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இது நாளொன்றுக்கு சராசரியாக 1.7க்கும் கூடுதலான பெரிய அளவிலான துப்பாக்கி சூடு எண்ணிக்கையாகும்.

அந்நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறைக்கு வேதனை தெரிவித்த அதிபர் பைடன், குழந்தைகள், குடும்பத்தினரை பாதுகாக்க தாக்குதல் நடத்த கூடிய ஆயுதங்களை தடை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என கூறினார். இதனை தொடர்ந்து கடந்த ஜூன் 22ந்தேதி துப்பாக்கி பாதுகாப்பு மசோதா கொண்டு வருவதற்கான முடிவில் அமெரிக்க நாடாளுமன்றம் முடிவு செய்தது.

சமீபத்தில் டெக்சாஸில் ஹால்தம் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். 3 அதிகாரிகள் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.


Next Story