ஜி-20 மாநாடு மிகப்பெரிய வெற்றி: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு


ஜி-20 மாநாடு மிகப்பெரிய வெற்றி: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு
x

கோப்புப்படம்

ஜி-20 மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. பொருளாதார வழித்தடம், 2 கண்டங்களில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்று இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க வெளியுறவுத்துறைசெய்தித்தொடர்பாளர் மாத்யு மில்லர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இந்தியாவில் நடந்து முடிந்த ஜி-20 மாநாடு, மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. அது வெற்றி என்று நிச்சயமாக நம்புகிறோம்.

முதலில், ஜி-20 பெரிய அமைப்பு. அதில் ரஷியா உறுப்பினராக இருக்கிறது. சீனா உறுப்பினராக இருக்கிறது. பல நாடுகள் மாறுபட்ட கருத்துகள் கொண்டுள்ளன.

இருப்பினும், பிற நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் மதிக்க வேண்டும் என்றும், அதை மீறக்கூடாது என்றும் அழைப்பு விடுக்கும் அறிக்கையை ஜி-20 அமைப்பால் வெளியிட முடிந்துள்ளது.

அந்த அறிக்கை முக்கியமானது, மைல்கல். ஏனென்றால், உக்ரைனை ஆக்கிரமித்த ரஷியாவின் மனதில் அந்த எண்ணம் இருக்கிறது.

பொருளாதார வழித்தடம்

மேலும், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் அறிவிக்கப்பட்டதையும் வரவேற்கிறோம். இந்த வழித்தடம், ஐரோப்பாவையும், ஆசியாவையும் இணைக்கும் புதிய சகாப்தத்தின் தொடக்கமாக அமையும். ஐரோப்பா, ஆசியா ஆகிய 2 கண்டங்களில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

ஜி-20 மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொள்ளவில்லை. அவர் பங்கேற்றிருக்க வேண்டுமா, வேண்டாமா என்று நான் பேச போவதில்லை.

ஆக்கப்பூர்வ பயணம்

ஆனால், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், வெளியுறவு மந்திரி பிளிங்கனுக்கும் இந்த பயணம் ஆக்கப்பூர்வமாக அமைந்தது. தலைவர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, தங்கள் நலன்களை முன்னிறுத்த முடிந்தது.

மேலும், பிற நாட்டு தலைவர்களுடனும் ஜோ பைடன் பேசினார். உக்ரைன் போர் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்.

சவுதி அரேபியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஏற்பாடுகள் குறித்தும் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்று அவர் கூறினார்.


Next Story