அமெரிக்கா: பாலம் மீது கப்பல் மோதிய விபத்தில் 6 பேர் பலி?


அமெரிக்கா:  பாலம் மீது கப்பல் மோதிய விபத்தில் 6 பேர் பலி?
x

அமெரிக்காவில் பால்டிமோர் பகுதியில் பாலம் மீது கப்பல் மோதிய விபத்தில் காணாமல் போன 8 பேரில் 2 பேர் மீட்கப்பட்டு விட்டனர் என அதிபர் ஜோ பைடன் கூறினார்.

மேரிலேண்ட்,

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் பால்டிமோர் பகுதியில் பிரான்சிஸ் ஸ்காட் என்ற பெயரிலான மிக பெரிய பாலம் ஒன்று அமைந்துள்ளது. இதன் வழியே, சரக்கு மற்றும் பயணிகள் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. பாலத்தின் மீது வாகன போக்குவரத்தும் நடந்து வருகிறது.

இந்நிலையில், சிங்கப்பூர் கொடியுடன் கூடிய டாலி என்ற பெயரிலான பெரிய சரக்கு கப்பல் ஒன்று பால்டிமோர் வழியே, இலங்கையின் கொழும்பு நகருக்கு சென்று கொண்டிருந்தது. அந்த கப்பல் நேற்று அதிகாலை திடீரென பாலத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதனை கடலோர காவல் படையை சேர்ந்த மேத்யூ வெஸ்ட் என்பவர் உறுதிப்படுத்தி உள்ளார்.

இதில், பாலத்தின் ஒரு பகுதி இடிந்து நீருக்குள் விழுந்தது. இதனால் பாலத்தில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் நீரில் விழுந்தன. இந்த சம்பவத்தில், பாலத்தின் மீது மோதிய வேகத்தில் கப்பல் தீப்பிடித்து கொண்டது. பின்னர் அது நீரில் மூழ்கியது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பால்டிமோர் நகர தீயணைப்பு துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீட்பு பணி மேற்கொள்ள சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். வாகனங்கள் நீரில் விழுந்ததில் பலர் சிக்கி கொண்டனர். பாலத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களும் நீரில் விழுந்தனர்.

இந்த விபத்து எதிரொலியாக, பாலத்தின் இருபுறமும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு உள்ளன. போக்குவரத்து வேறு பகுதிக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது என்று மேரிலேண்ட் போக்குவரத்து கழகம் தெரிவித்தது.

தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. இதுபற்றி மேரிலேண்ட் போலீசார் இன்று கூறும்போது, பால விபத்தில் சிக்கிய தொழிலாளர்களில் 6 பேர் பலியாகி இருக்க கூடும் என கூறினர்.

இதற்கு முன் அதிபர் ஜோ பைடன் கூறும்போது, பால விபத்து ஏற்பட்ட பின்னர் 8 பேர் காணாமல் போனார்கள். அவர்களை பற்றிய விவரங்கள் தெரிய வரவில்லை. எனினும், 2 பேர் மீட்கப்பட்டு விட்டனர். மீதமுள்ள 6 பேரை மீட்கும் பணி நடந்து வருகிறது. பாலம் சீரமைக்கும் பணிக்கு தேவையான முழு தொகையையும் அரசு ஏற்கும் என்று கூறினார்.

இந்த விபத்து பற்றி சினர்ஜி மேரிடைம் குரூப் என்ற அந்த கப்பல் நிறுவனம் கூறும்போது, கப்பலில் 22 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் இந்தியர்கள் என தெரிவித்து இருந்தது. எனினும், முரண்பட்ட தகவல்கள் வருகின்றன. இதனை ஆய்வு செய்ய வேண்டி உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

பால சீரமைப்பு மற்றும் வாகன போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்ப கொண்டு வரப்படுவது எளிதல்ல என்றும் அதிக செலவு வாய்ந்தது என்றும் அமெரிக்க போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது. துரிதகதியில் மீட்பு பணிகளை மேற்கொண்டு, பலரை காப்பாற்றிய வீரர்களுக்கு மேரிலேண்ட் கவர்னர் வெஸ் மூரே தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.


Next Story