பெரு நாட்டில் அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் - தலைநகர் லிமாவில் போலீசார் தடியடி


பெரு நாட்டில் அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் - தலைநகர் லிமாவில் போலீசார் தடியடி
x

போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தைக் கலைத்தனர்.

லிமா,

தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. 2020-ம் ஆண்டில் அந்த நாடு 5 நாளில் 3 அதிபர்களைக் கண்டது.

இந்த நிலையில் பள்ளி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கிய இடதுசாரியான பெட்ரோ காஸ்டிலோ, வலதுசாரியான கெய்கோவை வீழ்த்தி பெரு நாட்டின் அதிபராக கடந்த 2021 ஜூன் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் அவற்றை காஸ்டிலோ திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

இதனிடையே பெட்ரோ காஸ்டிலோ, பெரு நாட்டில் அவசர நிலையை அமல்படுத்துவதாகவும், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் ஆட்சியை மீண்டும் ஏற்டுத்தும் நோக்கத்தில் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த அரசை ஏற்படுத்தப்போவதாகவும் அறிவித்தார்.

இது அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதிபரின் முடிவை எம்.பி.க்கள் நிராகரித்தனர். மேலும் பெட்ரோ காஸ்டிலோவுக்கு எதிராக அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அவரது பதவியைப் பறிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக பெரும்பான்மையான எம்.பி.க்கள் ஓட்டு போட்டதால் காஸ்டிலோ அதிபர் பதவியை இழந்தார். மேலும் கிளர்ச்சி மற்றும் சதித்திட்டம் தீட்டியதற்காக அடுத்த சில நிமிடங்களில் அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக துணை அதிபராக இருந்த 60 வயதான பெண் தலைவர் டினா பொலுவார்டே அதிபராக பதவியேற்றார்.

இந்நிலையில் தன்னை காவலில் இருந்து விடுவிக்குமாறு காஸ்டிலோ தாக்கல் செய்த மனுவை பெரு நாட்டின் நீதிமன்றம் நிராகரித்தது. இதனை தொடர்ந்து பெட்ரோ காஸ்டிலோவை விடுதலை செய்யவும், டினா பொலுவார்டே பதவி விலகவும் வலியுறுத்தி காஸ்டிலோ ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதனால் பெரு நாட்டில் பல இடங்களில் போராட்டக் களமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக தலைநகர் லிமாவில், போராட்டக்காரர்கள் இணைந்து மாபெரும் பேரணியை நடத்தினர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனை கட்டுப்படுத்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தைக் கலைத்தனர். நாடு தழுவிய அளவில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் போராட்டங்களால் பெரு நாட்டில் தற்போது பதற்றம் நிலவி வருகிறது.


Next Story