'உக்ரைனின் முக்கிய அணையில் உடைப்பு ஏற்பட்டது மிக கொடூரமானது' - ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ்


உக்ரைனின் முக்கிய அணையில் உடைப்பு ஏற்பட்டது மிக கொடூரமானது - ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ்
x

டினிப்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உக்ரைனின் கார்சன் நகரில் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கீவ்,

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. போரில் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.

போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் உக்ரைனின் கார்சன் மாகாணத்தில் கக்ஹொவ்ஸ்கா என்ற அணையில் நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக டினிப்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உக்ரைனின் கார்சன் நகரில் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

உடைப்பு ஏற்பட்ட அணை ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் பகுதியில் உள்ளது. இதனால், இந்த அணையை உக்ரைன் தகர்த்ததாக ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது. அதேவேளை, அணையை ரஷியா தகர்த்ததாக உக்ரைன் குற்றஞ்சாட்டி வருகிறது

இந்நிலையில் அணை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அண்டோனியோ குட்ரெஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், 'இந்த தாக்குதல் மக்கள் மீதான போருக்கு கொடுக்கும் கொடூர விலைக்கு மற்றும் ஓர் உதாரணம். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பாதிக்கப்படுவோரின் அவலக்குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இது நிறுத்தப்பட வேண்டும்.

குடிநீர், நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் மற்றும் இதர உதவிகள் வழங்குவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதநேய தொண்டு அமைப்புகள் உக்ரைன் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன" என்று அவர் தெரிவித்தார்.


Next Story