திருட சென்ற இடத்தில் சத்தமாக குறட்டை விட்டு தூங்கியதால் சிக்கிக்கொண்ட திருடன்..!


திருட சென்ற இடத்தில் சத்தமாக குறட்டை விட்டு   தூங்கியதால் சிக்கிக்கொண்ட திருடன்..!
x
தினத்தந்தி 24 Nov 2023 5:13 PM GMT (Updated: 24 Nov 2023 5:14 PM GMT)

திருடனின் குறட்டை சத்தம் கேட்டு வீட்டு உரிமையாளர்களில் ஒருவரான டாங் என்ற பெண் கண் விழித்துள்ளார்.

பிஜீங்,

தென்மேற்கு சீனாவில் உள்ள யுனான் மாகாணத்தை சேர்ந்தவர் டாங். சம்பவத்தன்று இவரது வீட்டுக்குள் ஒரு திருடன் கொள்ளையடிப்பதற்காக நுழைந்துள்ளான். அப்போது வீட்டில் இருப்பவர்கள் பேசி கொண்டிருக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் தூங்கும் வரை காத்திருக்கலாம் என திட்டம் தீட்டிய கொள்ளையன் அங்குள்ள ஒரு அறையில் காத்திருந்தார். அப்போது சிகரெட் பற்ற வைத்து புகைத்த திருடன் சிறிது நேரத்தில் கண் அயர்ந்து தூங்கி விட்டான்.

சிறிது நேரத்தில் அவர் குறட்டையும் விட்டுள்ளார். இதற்கிடையே வீட்டில் உள்ளவர்களும் கண் அயர்ந்து உறங்கிய நிலையில், திருடனின் குறட்டை சத்தம் கேட்டு வீட்டு உரிமையாளர்களில் ஒருவரான டாங் என்ற பெண் கண் விழித்துள்ளார். முதலில் பக்கத்து வீட்டில் இருந்து தான் குறட்டை சத்தம் வருகிறதோ என கருதிய அவர் சத்தம் பக்கத்து அறையில் இருந்து வருவதை உணர்ந்து அங்கு சென்ற போது திருடன் பதுங்கி குறட்டை விட்டுக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக வீட்டில் உள்ளவர்களை எழுப்பியதோடு, போலீசாருக்கும் தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று திருடனை கைது செய்தனர். திருடன் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதாகவும், கடந்த ஆண்டு ஒரு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story