நடுவானில் விமானத்தில் திடீரென பயணியை தாக்கிய சிறுவனால் பரபரப்பு


நடுவானில் விமானத்தில் திடீரென பயணியை தாக்கிய சிறுவனால் பரபரப்பு
x

இங்கிலாந்து எம்.பி. ஒருவருக்கு கடந்த அக்டோபரில், ஏர் கனடா விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

டொரண்டோ,

கனடாவின் டொரண்டோ நகரில் இருந்து கால்கரி நோக்கி ஏர் கனடா 137 என்ற எண் கொண்ட விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில் சென்றபோது, திடீரென 16 வயது சிறுவன் எழுந்து பயணி ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளான். இதில், அந்த நபருக்கு காயம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து விமானம், வின்னிபெக் ரிச்சர்ட்சன் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. இதுபற்றி கனடா போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கிராண்ட் பிரெய்ரி பகுதியை சேர்ந்த சிறுவன், குடும்பத்துடன் வந்த நபரை தாக்கியிருக்கிறார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது என கூறினர்.

சம்பவம் நடந்ததும் சக பயணிகள் மற்றும் விமான நிறுவன ஊழியர்கள் உடனடியாக அந்த சிறுவனை தடுத்து, கட்டுக்குள் கொண்டு வந்தனர். தாக்குதலுக்கு ஆளான நபருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டான். இந்த தாக்குதலுக்கான பின்னணி பற்றி தெளிவாக தெரிய வரவில்லை.

இதனால், கால்கரிக்கு விமானம் தொடர்ந்து பயணிப்பதில் 3 மணிநேர காலதாமதம் ஏற்பட்டது. இங்கிலாந்து எம்.பி. ஒருவருக்கு கடந்த அக்டோபரில், ஏர் கனடா விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொழிலாளர் கட்சியை சேர்ந்த எம்.பி.யான முகமது யாசின் என்பவர் கனடாவுக்கு புறப்பட தயாரானார். அவருடன் மற்ற எம்.பி.க்களும் தயாராக இருந்தனர். ஆனால், முகமது என்ற பெயர் காரணத்திற்காக அவர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். இது அப்போது பரபரப்பு ஏற்படுத்தியது.

அவரிடம் கனடாவுக்கு புறப்படுவதற்கு முன்பும், பின்னர் டொரண்டோவில் இருந்து இங்கிலாந்துக்கு திரும்பும்போதும் என 2 முறை குடியுரிமை அதிகாரிகள் தடுத்து, நிறுத்தி விசாரித்தனர். முகமதுவிடம் ஆயுதங்கள் எதுவும் உள்ளனவா? என சோதனை நடந்தது. எம்.பி.க்கான அடையாளம் மற்றும் விசா ஆகியவற்றை நிரூபித்த பின்னரே, இறுதியாக விமானத்தில் ஏற அவர் அனுமதிக்கப்பட்டார்.


Next Story