விண்வெளி நிலைய கட்டமைப்பு பணிக்காக 3 பேர் கொண்ட குழுவை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது சீனா


விண்வெளி நிலைய கட்டமைப்பு பணிக்காக 3 பேர் கொண்ட குழுவை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது சீனா
x

கோப்புப்படம் 

சீனா தனக்கென ஒரு விண்வெளி நிலையத்தை விண்வெளியில் உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

பெய்ஜிங்,

விண்வெளியில் டியாங்காங் என்ற தனி விண்வெளி நிலையத்தை உருவாக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. இதற்காக பல கட்டங்களாக வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி சீனா அங்கு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே இதற்காக பல முறை விண்வெளிக்கு அனுப்பியுள்ள சீனா கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஷென்சோ 13 விண்கலத்தில் 3 விண்வெளி வீரர்களை அனுப்பியது. அவர்கள் 3 பெரும் விண்வெளியில் இருந்தபடி பூமியில் உள்ள சீன வல்லுனர்களுடன் இணைந்து பணியாற்றி வந்தனர். 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் ஷென்சோ 13 குழுவினர் மங்கோலியாவின் வடக்குப் பகுதியில் உள்ள கோபி பாலைவனத்தில் தரையிறங்கி சமீபத்தில் பூமிக்கு திரும்பினர்.

இந்த நிலையில் மீண்டும் அடுத்த கட்டமாக சீனா தனது புதிய விண்வெளி நிலையத்திற்கு மேலும் மூன்று விண்வெளி வீரர்களை ஜூன் மாதத்தில் அனுப்ப ஏற்கெனவே திட்டமிட்டு இருந்தது.

அதன்படி, வடமேற்கு மாகாணமான கன்சுவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுகணை மையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 10:44 மணிக்கு (0244 GMT) 3 சீன விண்வெளி வீரர்களுடன் லாங் மார்ச்-2எஃப் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

ஷென்சோ 14 விண்கலத்தில் செல்லவுள்ள இவர்கள் ஆறு மாதங்கள் விண்ணில் தங்கியிருந்து விண்வெளி நிலையத்தின் வெண்டியன் மற்றும் மெங்டியன் என்ற இரண்டு தொகுதிகளை சேர்க்கும் பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story