5 நாள் சுற்றுப்பயணமாக ரஷியா சென்றார் மத்திய மந்திரி ஜெய்சங்கர்


5 நாள் சுற்றுப்பயணமாக ரஷியா சென்றார் மத்திய மந்திரி ஜெய்சங்கர்
x

ரஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவுடன் இரு தரப்பு விவகாரங்கள் பற்றி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

மாஸ்கோ,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 5 நாள் சுற்றுப்பயணமாக ரஷியாவுக்கு சென்றார். நேற்று மாஸ்கோ சென்றடைந்த அவருக்கு அந்நாட்டின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர், ரஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவுடன் இரு தரப்பு விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இரு நாடுகளின் உறவுகள், குறிப்பாக வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாட்டு மந்திரிகளும் விவாதிப்பார்கள் என்று தெரிகிறது.

மேலும் ரஷிய தொழில், வர்த்தகத் துறை மந்திரியுமான டெனிஸ் மாந்த்ரோவையும் சந்தித்து பொருளாதார ஈடுபாடு குறித்த விஷயங்கள் பற்றியும் பேசுகிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது மந்திரி ஜெய்சங்கர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கும் செல்ல உள்ளார் என்று தகவல்கள் தெரியவருகிறது.

இதனிடையே மத்திய மந்திரி ஜெய்சங்கர் தனது எக்ஸ் வலைதளத்தில், "ரஷிய மூலோபாய சமூகத்தின் முன்னணி பிரதிநிதிகளுடன் ஒரு திறந்த மற்றும் முன்னோக்கு தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. மறுசீரமைப்பின் முக்கியத்துவம் மற்றும் பன்முகத்தன்மையின் தோற்றம் பற்றி பேசினர்.

அந்த கட்டமைப்பில் இந்தியா-ரஷியா உறவுகள் எவ்வாறு வளரும் என்பது குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டது. இணைப்பு, பலதரப்பு, பெரிய அதிகாரப் போட்டி மற்றும் பிராந்திய மோதல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

புவிசார் அரசியல் மற்றும் மூலோபாய ஒருங்கிணைப்பு எப்போதும் இந்தியா-ரஷியா உறவுகளை நேர்மறையான பாதையில் வைத்திருக்கும்" என்று அதில் பதிவிட்டிருந்தார்.


Next Story