காசா: பெரிய மருத்துவமனையில் சேவை நிறுத்தம்; 3 குழந்தைகள் பலியான சோகம்


காசா:  பெரிய மருத்துவமனையில் சேவை நிறுத்தம்; 3 குழந்தைகள் பலியான சோகம்
x

இஸ்ரேல் ராணுவ வீரர்கள், இந்த மருத்துவமனையை நாலாபுறமும் சுற்றி வளைத்து விட்டனர் என டாக்டர் அஷ்ரப் அல்-குவித்ரா கூறுகிறார்.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில், வடக்கு காசா பகுதியில் அமைந்துள்ள பெரிய, அல்-ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

இதனால், அந்த மருத்துவமனையில் மருத்துவ சேவை வழங்கப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

இதுபற்றி ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரலான, டாக்டர் முனீர் அல்-புர்ஷ் கூறும்போது, இந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில், இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் தாக்குதலால் சேவை நிறுத்தப்பட்டு விட்டது.

இதில், குழந்தைகளுக்கான வார்டில் 3 குழந்தைகள் உயிரிழந்து விட்டன. இதனால், 36 குழந்தைகள் உள்ள இந்த பிரிவில் கைகளால் செயற்கை சுவாசம் அளிக்க, டாக்டர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என கூறினார்.

இதில் ஹமாஸ் அமைப்பினரால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான டாக்டர் அஷ்ரப் அல்-குவித்ரா கூறும்போது, இந்த மருத்துவமனையை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் நாலாபுறமும் சுற்றி வளைத்து விட்டனர்.

400 பேர் சிகிச்சை பெறும் நிலையில், புலம்பெயர்ந்த 20 ஆயிரம் பேர் மருத்துவமனை வளாகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர் என கூறியுள்ளார்.

தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து வெளியேற முடியாமல் அவர் சிக்கி கொண்டார். ஐ.சி.யூ., ஆக்சிஜன் உபகணரங்கள் பணியை நிறுத்தி விட்டன என குவித்ரா கூறுகிறார்.


Next Story