கொலம்பியாவின் புதிய அதிபராக கஸ்டாவோ பெட்ரோ முறைப்படி பதவியேற்பு


கொலம்பியாவின் புதிய அதிபராக கஸ்டாவோ பெட்ரோ முறைப்படி பதவியேற்பு
x

கொலம்பியாவின் புதிய அதிபராக முன்னாள் கொரில்லா படை உறுப்பினரான கஸ்டாவோ பெட்ரோ முறைப்படி பதவியேற்று கொண்டார்.



பொகட்டா,

கொலம்பியாவில் புதிய அதிபருக்கான தேர்தல் கடந்த ஜூனில் நடந்தது. இதில், கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளரை தோற்கடித்து இடதுசாரி பிரிவு தலைவரான கஸ்டாவோ பெட்ரோ வெற்றி பெற்றார்.

கன்சர்வேடிவ் கட்சியினர், பொருளாதாரத்தில் மித அளவிலான மாற்றங்களை கொண்டு வந்தபோதிலும், அது வாக்காளர்களை சென்றடையவில்லை. அதிகரித்து வரும் வறுமை, மனித உரிமை தலைவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு எதிரான வன்முறை ஆகியவற்றால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அது தேர்தலில் எதிரொலித்துள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்ற கஸ்டோ முறைப்படி நேற்று பதவியேற்று கொண்டார். போதை பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் கிளர்ச்சி குழுக்கள் ஆகியவை அரசுடன் தீவிர மோதல்போக்கை கொண்டிருந்தன. இதனால் நாடு உருக்குலைந்து போயுள்ளது. நாட்டில் அமைதியை கொண்டு வரவும், சமத்துவமின்மையை எதிர்த்து போராடுவேன் என்றும் கஸ்டோ உறுதி அளித்து உள்ளார்.

புதிய அதிபரான கஸ்டாவோ பெட்ரோ எம்-19 என்ற கொரில்லா படையின் முன்னாள் உறுப்பினராவார். தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் போதைப்பொருட்கள் உற்பத்தி அதிகம். உலக நாடுகளில் அதிகளவு கொகைன் போதைப்பொருள் உற்பத்தி செய்கிற நாடுகளில் கொலம்பியாவும் ஒன்று. ஆண்டுக்கு 910 டன் கொகைன் உற்பத்தி ஆகிறது. இதன்பின்னர் அவை வேறு நாடுகளுக்கும் கடத்தி கொண்டு செல்லப்படுகிறது.


Next Story