25 ஆண்டுகளுக்கு முன் நடந்ததா? - கற்பழிப்பு குற்றச்சாட்டு குறித்து டிரம்பிடம் விசாரணை


25 ஆண்டுகளுக்கு முன் நடந்ததா? - கற்பழிப்பு குற்றச்சாட்டு குறித்து டிரம்பிடம் விசாரணை
x

கோப்புப்படம்

25 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படும் கற்பழிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அதிபர் டிரம்பிடம் விசாரணை நடைபெற்றது.

வாஷிங்டன்,

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது ஜீன் கரோல் என்ற பெண் கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். அந்தப் பெண் தன் குற்றச்சாட்டில், 1995 இறுதியில் அல்லது 1996 தொடக்கத்தில் நியூயார்க் நகரில் உள்ள சொகுசு சூப்பர் மார்க்கெட்டில் உள்ள உடை மாற்றும் அறையில் டிரம்ப் என்னை கற்பழித்தார் என கூறி உள்ளார்.

இது தொடர்பாக அவர் நியூயார்க் பத்திரிகை ஒன்றில் 2019-ல் எழுதிய கட்டுரை அங்கு பேசு பொருளானது. ஆனால் டிரம்ப், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார். ஆனாலும் அந்தப் பெண், டிரம்ப் மீது அங்குள்ள கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.

அந்த வழக்கில் டிரம்பிடம் நேற்று முன்தினம் சத்திய பிரமாணத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இதைத் தெரிவித்த அந்தப் பெண்ணின் வக்கீல், டிரம்ப் அளித்த வாக்குமூலம் பற்றி எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. டிரம்ப் மீதான இந்த வழக்கில் வரும் பிப்ரவரி மாதம் 6-ந் தேதி அங்குள்ள சிவில் கோர்ட்டில் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

டிரம்பிடம் விசாரணை நடத்தப்பட்டதை அவரது வக்கீல் அலினா ஹப்பாவும் உறுதி செய்துள்ளார். ஆனால் இந்த விசாரணை நேரடியாக நடந்ததா அல்லது காணொலிக்காட்சி வழியாக நடந்ததா என்பது பற்றி தகவல் இல்லை.


Next Story