பாகிஸ்தானில் கனமழை, வெள்ளம்: 13 பேர் பலி


பாகிஸ்தானில் கனமழை, வெள்ளம்: 13 பேர் பலி
x

கோப்புப்படம்

பாகிஸ்தானில் ஏற்பட்ட கனமழை, வெள்ளம் காரணமாக 13 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி முதல் பலூசிஸ்தான், பஞ்சாப், சிந்து உள்ளிட்ட மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பஞ்சாப் மாகாணத்தின் தேரா காஜி கான், சாஹிவால் மற்றும் ராஜன்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று முன்தினம் கனமழை வெளுத்து வாங்கியது. விடியவிடிய கனமழை கொட்டித்தீர்த்தது.

குறிப்பாக அங்குள்ள சுலைமான் மலைத்தொடரில் கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக நூற்றுக்கணக்கான கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

தேரா காஜி கான் மாவட்டத்தில் சோட்டி ஜைரீன் என்கிற இடத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். அதே போல் சாஹிவால் மாவட்டம் ஆரிப்வாலா நகரில் பருத்தி சேகரிக்கும் தொழிலாளர்கள் தங்கியிருந்த வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 பெண்கள் பலியாகினர். மேலும் 2 சிறுமிகள், 6 பெண்கள் என 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதே போல் மழை தொடர்பான சம்பவங்களில் 5 வயது சிறுவன் உள்பட மேலும் 5 பேர் உயிரிழந்தனர். டஜன் கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

இதனிடையே பஞ்சாப் மாகாணத்தில் பல்வேறு இடங்களில் ரெயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானுடனான தரை வழி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் மக்கள் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் சிரமப்பட்டு வரும் நிலையில், தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.


Next Story