அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து பிடிபடும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!


அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து பிடிபடும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
x

Image Courtesy : AFP

பிடிபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் குடிபெயர்வதற்காக சட்டவிரோதமாக எல்லையைக் கடந்து அந்நாட்டிற்குள் நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க எல்லை பாதுகாப்பு மற்றும் சுங்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரை அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 96,917 இந்தியர்கள் பிடிபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 30,010 பேர் கனடா எல்லை வழியாகவும், 41,770 பேர் மெக்சிகோ எல்லை வழியாகவும் அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றுள்ளனர். மற்றவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்த பிறகு அதிகாரிகளிடம் பிடிபட்டுள்ளனர். பிடிபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-20 காலகட்டத்தில் 19,883 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றபோது பிடிப்பட்ட நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 5 மடங்காக அதிகரித்துள்ளது. அதே சமயம் அதிகாரிகளிடம் பிடிபடாமல் அமெரிக்க எல்லைக்குள் நுழைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


Next Story