ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தின் முதல் வெற்றி: 'அறநெறி போலீஸ்' பிரிவை கலைத்த ஈரான்


ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தின் முதல் வெற்றி: அறநெறி போலீஸ் பிரிவை கலைத்த ஈரான்
x

ஈரானில் கடந்த 2 மாதத்திற்கு மேலாக ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தெஹ்ரான்,

இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரான். அந்நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மத சட்டங்கள் சரியாக பின்பற்றப்படுவதையும், பெண்கள் ஹிஜாப் ஆடை அணிவதை உறுதிபடுத்தவும் 'அறநெறி போலீஸ்' பிரிவு செயல்பட்டு வருகிறது.

2006-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த அறநெறி போலீஸ் பிரிவு ஈரானில் மக்கள் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுவதை உறுதிபடுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். இதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.

இதனிடையே, அந்நாட்டின் தெஹ்ரானில் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி மாஷா அமினி (வயது 22) என்ற இளம்பெண்ணை ஈரான் அறநெறி போலீசார் கைது செய்தனர்.

ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி மாஷா அமினியை அறநெறி போலீசார் கடுமையாக தாக்கினர். இந்த தாக்குதலில் கோமா நிலைக்கு சென்ற மாஷா அமினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 16-ம் தேதி மாஷா அமினி உயிரிழந்தார். இந்த சம்பவம் ஈரான் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறு போலீசார் தாக்கியதில் இளம்பெண் மாஷா உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நாட்டின் பல நகரங்களுக்கு பரவி வருகிறது.

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், நாட்டின் பல்வேறு மாகாணங்களில் ஈரான் அரசுக்கு எதிராகவும், ஹிஜாப் ஆடை கட்டுப்பாட்டிற்கு எதிராகவும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியும், தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீசியும், கைது நடவடிக்கையிலும் ஈரான் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்கியதில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், ஈரான் அரசுக்கு எதிராகவும், ஹிஜாப் அணிவதற்கு எதிராகவும் ஈரானின் பல நகரங்களில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 2 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் முதல் முறையாக போராட்டக்காரர்களுக்கு ஈரான் அரசு பணிந்துள்ளது.

அந்த வகையில், ஈரானில் பொதுவெளியில் இஸ்லாமிய மத சட்டங்கள் சரியாக பின்பற்றப்படுவதையும், பெண்கள் ஹிஜாப் ஆடை அணிவதை உறுதிபடுத்தவும் உறுதிபடுத்தும் 'அறநெறி போலீஸ்' பிரிவை ஈரான் அரசு கலைத்துள்ளது.

அறநெறி போலீஸ் பிரிவு நிரந்தரமாக கலைக்கப்படதா? அல்லது இந்த நடவடிக்கை தற்காலிகமானதா? என்று அறிவிக்கப்படவில்லை.

ஆனாலும், அறநெறி போலீஸ் பிரிவு கலைப்பு ஈரானில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து 2 மாதங்களுக்கு மேலாக பெண்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.


Next Story