ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் முடிவு நிறுத்திவைப்பு


ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் முடிவு நிறுத்திவைப்பு
x

அமெரிக்காவின் உத்தரவாதங்கள் ஏப்ரல் 16-ம் தேதிக்குள் கிடைக்காவிட்டால், அசாஞ்சே மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்படும் என்று நீதிபதிகள் கூறினர்.

லண்டன்:

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை ஹேக் செய்து விக்கி லீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே (வயது 56).

இந்த விவகாரத்தில் அமெரிக்கா கொடுத்த நெருக்கடிகளின் காரணமாக இங்கிலாந்தில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்த அசாஞ்சே, கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் லண்டனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். உளவு குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தொடங்கியது.

அசாஞ்சேவின் தடுப்புக்காவல் பற்றிய அமெரிக்காவின் உறுதிமொழியானது, அவர் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவார் என்று உத்தரவாதம் அளிப்பதற்கு போதுமானது என்று 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. நாடு கடத்தப்படுவதை எதிர்த்து அசாஞ்சே மேல்முறையீடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

அதன்பின்னர், ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்தும்படி இங்கிலாந்து அரசு 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது. இதனால் பல ஆண்டுகளாக அசாஞ்சே நடத்திய சட்டப்போராட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியது.

எனினும், அசாஞ்சேவை நாடு கடத்துவதை நிறுத்தி வைப்பதற்கான இறுதிக்கட்ட முயற்சியை அவரது வழக்கறிஞர்கள் தொடங்கினர். மேல்முறையீடு செய்ய அனுமதி கேட்டு, கடந்த பிப்ரவரி மாதம் மனு தாக்கல் செய்தனர். அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தால் அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதே அவரது வழக்கறிஞர்களின் வாதமாக உள்ளது.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள், இங்கிலாந்தில் இருந்து அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தினால் அங்கு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட மாட்டாது உள்ளிட்ட சில உத்தரவாதங்களை வழங்கவேண்டும் என உத்தரவிட்டனர். மூன்று வாரங்களுக்குள் இந்த உத்தரவாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு அவகாசம் அளித்தனர்.

அமெரிக்காவின் உத்தரவாதங்கள் வரும் ஏப்ரல் 16-ம் தேதிக்குள் கிடைக்காவிட்டால், அசாஞ்சே மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் கூறினர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே 20-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அசாஞ்சேவின் நாடு கடத்தும் முடிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.


Next Story