டிரம்ப் மீண்டும் அதிபர் ஆனால்.. நினைத்தாலே பயமாக இருக்கிறது: கமலா ஹாரிஸ் பேச்சு


டிரம்ப் மீண்டும் அதிபர் ஆனால்.. நினைத்தாலே பயமாக இருக்கிறது: கமலா ஹாரிஸ் பேச்சு
x

தற்போதைய அதிபர் ஜோ பைடன் தரப்பு பிரசாரத் திட்டத்தை இன்னும் வலுப்படுத்தவேண்டும் என ஒபாமா வலியுறுத்தினார்.

வாஷிங்டன்:

அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் அதிபர் டிரம்ப் களம் இறங்கியுள்ளார். அக்கட்சியின் வேட்பாளர் தேர்வில், டிரம்புக்கு அதிக ஆதரவு உள்ளது. எனவே, அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அவர் போட்டியிட்டால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

இதற்கிடையே ஜோ பைடனின் பிரசார யுக்தி குறித்து முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கேள்வி எழுப்பினார். மேலும் டிரம்பின் முன்னேற்றம் குறித்து கவலை தெரிவித்த அவர், பைடன் தரப்பு பிரசாரத் திட்டத்தை இன்னும் வலுப்படுத்தவேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில், அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது:

டொனால்டு டிரம்ப் அதிபராக வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்கு மீண்டும் திரும்புவார் என்று நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது. இதனால்தான் நான் நாடு முழுவதும் பயணம் செய்து பிரசாரம் செய்கிறேன். டிரம்ப் அதிபராவது பற்றி நாம் அனைவரும் பயப்பட வேண்டும். நாம் பயப்படும்போது அதற்கு எதிராக நாம் போராட வேண்டும். நம் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பயப்படும்போது, நாம் இழுத்து போர்த்திக்கொண்டு படுத்திருப்போமா? இல்லை. நம்மால் முடியாது. ஜனநாயக கட்சியினரை மீண்டும் போராட அழைப்பு விடுக்கிறேன்.

இவ்வாறு கமலா ஹாரிஸ் பேசினார்.


Next Story