முதன்முறையாக தனது மகளை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்திய கிம் ஜாங் உன்... அரசியல் முன்னோட்டமா?


முதன்முறையாக தனது மகளை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்திய கிம் ஜாங் உன்... அரசியல் முன்னோட்டமா?
x

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் முதன்முறையாக தனது மகளை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.



பியாங்யாங்,



வடகொரியாவில் நடக்க கூடிய விசயங்கள் வெளியுலகிற்கு பரவலாக தெரிவதில்லை. அந்நாட்டு சட்ட திட்டங்கள் அதற்கேற்ற வகையில் உள்ளன. அதிபர் கிம் ஜாங் அன்னை பற்றி வெளிவர கூடிய தகவல்கள் தணிக்கை செய்யப்பட்ட வகையிலேயே வெளியிடப்படும் என்றும் கூறுவதுண்டு.

இதேபோன்று, கிம்முக்கு பிடிக்காத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு, உயர் பதவியில் அல்லது உயரதிகாரியாக இருந்தபோதும் மரண தண்டனை கூட வழங்கப்படும் சூழல் உள்ளது என்று அவ்வப்போது வெளிவரும் தகவல்கள் உறுதிப்படுத்தி உள்ளன.

கிம்மின் குடும்பம் பற்றிய தகவலிலும் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. கிம்முக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் என மொத்தம் 3 குழந்தைகள் உள்ளனர் என நம்பப்படுகிறது. அவர்களில் ஒருவர் கடந்த செப்டம்பரில் நடந்த தேசிய விடுமுறை தின கொண்டாட்டத்தின்போது, வெளியான புகைப்படத்தில் காணப்பட்டார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், முதன்முறையாக ஏவுகணை சோதனை நிகழ்வின்போது, தனது மகளையும் உடன் அழைத்து சென்ற கிம், அது தொடர்புடைய புகைப்படங்களை முதன்முறையாக உலகிற்கு இன்று தெரியப்படுத்தி உள்ளார். அதில், வெண்ணிறத்தில் கோட் ஒன்று அணிந்தபடி தனது தந்தையின் கைகளை பிடித்தபடி கிம்மின் மகள் நடந்து செல்கிறார்.

கிம்முக்கு மகள் இருப்பது பற்றி வெளியுலகுக்கு இதற்கு முன்பு தெரியாத நிலையில், இது பெரிய ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளது என அந்நாட்டில் இருந்து வெளிவரும் கே.சி.என்.ஏ. என்ற செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. எனினும், கிம்மின் மகள் பெயர் வெளியிடப்படவில்லை.

இதுபற்றி அமெரிக்காவை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஸ்டிம்சன் மையத்தின் வடகொரிய தலைமை நிபுணரான மைக்கேல் மேடன் கூறும்போது, கிம்மின் மகளை பொது நிகழ்ச்சியில் முதன்முறையாக பார்க்கும் தருணம் இது என குறிப்பிட்டார்.

ஓய்வுபெற்ற அமெரிக்க கூடைப்பந்து வீரரான டென்னிஸ் ராட்மேன் கடந்த 2013-ம் ஆண்டு கூறும்போது, கிம்முக்கு ஜூ யே என்ற பெண் குழந்தை உண்டு என கூறினார்.

வடகொரிய பயணத்திற்கு பின்னர், தி கார்டியன் செய்தி நிறுவனத்திற்கு ராட்மேன் அளித்த பேட்டியின்போது, கிம் மற்றும் அவரது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டேன். கிம்மின் குழந்தையை கையில் வைத்திருந்தேன் என கூறினார்.

இதன்படி, கிம்மின் மகளுக்கு தற்போது 12 முதல் 13 வயது இருக்க கூடும். அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் கிம்மின் மகள் பல்கலை கழகத்தில் படிப்பதற்கோ அல்லது ராணுவ சேவையில் ஈடுபடவோ தயாராக கூடும் என மேடன் கூறியுள்ளார்.

கிம்மின் மகள், நாட்டின் தலைமைத்துவத்திற்கான படிப்பு மற்றும் பயிற்சி பெறுவார் என்பதற்கான அடையாளம் ஆக அவர் வெளியுலகுக்கு வந்துள்ளார். அவர் தனது அத்தையை போன்று, ஓர் ஆலோசகராக, செயல்களை பின்னின்று நடத்துபவராக இருப்பார் என மேடன் கூறியுள்ளார்.

எனினும், கிம்முக்கு பின் நாட்டை யார் வழிநடத்துவார் என்ற செய்தியை வடகொரியா ஒருபோதும் வெளியிடவில்லை.

இந்த நிகழ்வில் கிம்மின் மனைவி ரி சொல் ஜூவும் காணப்பட்டார். இதுவும் மிக அரிய நிகழ்வு என கூறப்படுகிறது. இதனால், வடகொரிய அரசில் இயல்பான ஓர் அரசியல் சூழல் காணப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகவும், உச்சபட்ச தலைவர் என்ற கிம்மின் பதவியை சுற்றியுள்ள சூழல் மாறுபடுவது தெரிகிறது என்று அமெரிக்காவை அடிப்படையாக கொண்டு இயங்கும் மற்றொரு மையத்தின் வடகொரிய தலைமை நிபுணரான கென் காஸ் கூறுகிறார்.

வெளியுலகுக்கு கிம்மின் மகள் அடையாளப்படுத்தப்பட்டு இருப்பது சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பரபரப்புடன் பார்க்கப்படுகிறது. இதனால், 4-வது தலைமுறையாக பாரம்பரிய முறைப்படி கிம்முக்கு அடுத்து, நாட்டை ஆளும் தலைமை பண்புக்கு அவர் தயாராவார் என்றும் அடுத்த கட்ட தலைவர் தயாராகி வருகிறார் என்றும், அதுவே வடகொரிய மக்களுக்கு தற்போது தேவையான ஒன்றாகவும் உள்ளது என்றும் பார்க்கப்படுகிறது.


Next Story