வெனிசுலாவில் நிலச்சரிவு: 22 பேர் பலி; 50 பேர் மாயம்


வெனிசுலாவில் நிலச்சரிவு:  22 பேர் பலி; 50 பேர் மாயம்
x

வெனிசுலா நாட்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 22 பேர் பலியானார்கள். 50 பேரை காணவில்லை.



சான்டோஸ் மிச்செலினா,


வெனிசுலா நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், சான்டோஸ் மிச்செலினா நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் லாஸ் தெஜேரியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அவற்றின் 5 கால்வாய்களிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த நிலையில், அரகுவா என்ற மத்திய மாகாணத்தின் வடக்கே கனமழையால் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலச்சரிவில் பலர் சிக்கி கொண்டனர். அவர்களில் 22 பேர் பலியானார்கள். 50 பேரை காணவில்லை.

இதனை தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ, அவசரகால நிலையை பிறப்பித்து உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு முகமைகளை சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணி உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டு உள்ளார்.

இதன்படி, மீட்பு மற்றும் நிவாரண பணியில் தேசிய பேராபத்து மேலாண் அமைப்பு மற்றும் காவல் அதிகாரிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.

வெனிசுலாவில் பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக துணை நிற்கும் வகையில் நாட்டில் 3 நாட்கள் தேசிய அளவில் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்றும் அதிபர் மதுரோ அறிவித்து உள்ளார்.


Next Story