இலங்கையில் முக்கிய அமைச்சர்கள் பலரும் ராஜினாமா...!

இலங்கை பிரதமர், அதிபர் பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் முக்கிய அமைச்சர்கள் பலரும் ராஜினாமா செய்துள்ளனர்.
கொழும்பு,
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே, ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பிச்சென்றுவிட்டார்.
போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அதேபோல், அதிபர் கோத்தபயா ராஜபக்சே தனது பதவியை வரும் 13-ம் தேதி ராஜினாமா செய்வார் என நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கை பிரதமர், அதிபர் பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் முக்கிய அமைச்சர்கள் பலரும் ராஜினாமா செய்துள்ளனர். அதன்படி, விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.
அனைத்துக்கட்சிகள் இணைந்து கூட்டாட்சி அரசை அமைக்க வழிவகுக்கும் வகையில் ராஜினாமா செய்ததாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.






