மீண்டும் தாமதம்.... நிலவுக்கு நவம்பர் மாதம் ராக்கெட்டை அனுப்ப நாசா திட்டம்


மீண்டும் தாமதம்.... நிலவுக்கு நவம்பர் மாதம் ராக்கெட்டை அனுப்ப நாசா திட்டம்
x

நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் திட்டம் புயலால் தாமதமாகியுள்ள நிலையில், நவம்பரில் மீண்டும் ஏவப்படும் என நாசா தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா 1969-ல் முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. தொடர்ந்து பல்வேறு விண்வெளி ஆராய்ச்சில் ஈடுபட்டு வரும் நாசா, தற்போது மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, 'ஆர்டெமிஸ்' திட்டத்தை துவங்கியுள்ளது.

2025-க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா, இதன் முதல்கட்ட சோதனை முயற்சியாக, ஆர்டெமிஸ் - 1 ராக்கெட்டை நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்ப உள்ளது.

இந்த ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சிக்கான, 'ஓரியன்' விண்கலத்தை சுமந்து செல்கிறது. புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஆர்டெமிஸ் - 1 ராக்கெட் ஏவப்படுவதாக இருந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரண்டு முறை ராக்கெட் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, ராக்கெட் மீண்டும் கடந்த 27 ஆம் தேதி ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், புயல் காரணமாக ராக்கெட் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அக்டோபரில் இந்த ராக்கெட்டை மீண்டும் ஏவ நாசா திட்டமிட்டு இருந்தது.

இந்த நிலையில், புயலின் பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்த காரணத்தினால், ஏவுதளத்தில் இருந்த ராக்கெட் கடந்த செவ்வாயன்று கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள சேமிப்பு பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டது. புயல் புளோரிடாவின் சில பகுதிகளை அழித்தது, ஆனால் ராக்கெட்டுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று நாசா தெரிவித்துள்ளது.

98 மீட்டர் உயரம் (320 அடி) ராக்கெட்டை மீண்டும் அதன் ஏவுதளத்திற்கு கொண்டு செல்வதற்கும், புறப்படுவதற்கு அதை தயார்படுத்துவதற்கும் பல நாட்கள் ஆகும். இதனால், ராக்கெட்டை நவம்பரில் ஏவ நாசா திட்டமிட்டு உள்ளது.


Next Story