பணய கைதிகளை விடுவிக்காமல் போர்நிறுத்தம் கிடையாது: இஸ்ரேல்


பணய கைதிகளை விடுவிக்காமல் போர்நிறுத்தம் கிடையாது:  இஸ்ரேல்
x
தினத்தந்தி 9 Nov 2023 1:22 AM GMT (Updated: 9 Nov 2023 7:54 AM GMT)

காசாவில், தரைவழி தாக்குதல் தொடங்கியது முதல், 130 சுரங்கங்கள் கண்டறியப்பட்டு, அழிக்கப்பட்டு உள்ளன.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு இடையேயான மோதல் நீடித்து வரும் சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், எங்களுடைய பணய கைதிகளை விடுவிக்காமல் போர்நிறுத்தம் என்பது கிடையாது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரை நாங்கள் வெற்றி பெற விடமாட்டோம்.

தெற்கு இஸ்ரேலில் எங்களுடைய சமூக கட்டமைப்புகளை மீண்டும் அமைத்து, எங்களுடைய வாழ்க்கையை தொடர்ந்து வாழ்வதற்கான விசயங்களை மேற்கொள்வோம் என தெரிவித்து உள்ளார்.

காசாவில், தரைவழி தாக்குதல் தொடங்கியது முதல், 130 சுரங்கங்கள் கண்டறியப்பட்டு, அழிக்கப்பட்டு உள்ளன என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.

இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 3 ஆயிரம் பயங்கரவாதிகள், கடந்த அக்டோபர் 7-ந்தேதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து, இசை திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் உள்பட எல்லை பகுதியில் தங்கியிருந்தவர்களை கடுமையாக தாக்கி வன்முறையில் ஈடுபட்டனர்.

ஹமாஸ் அமைப்பின் அதிரடி தாக்குதலில், 1400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். அந்த அமைப்பு 241 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றுள்ளது என இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.

இஸ்ரேல் பாதுகாப்பு படையின் வீரர்கள் காசா பகுதியில் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், மருத்துவமனை உள்பட வெவ்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு, பீரங்கியை தாக்கி அழிக்க கூடிய ஏவுகணைகளை செலுத்தினர்.

எனினும், போர் ஹெலிகாப்டர் ஒன்றின் உதவியுடன் இஸ்ரேல் படையினர் பாதுகாப்பாக சென்று, ஏவுகணை தாக்குதல் தொடுத்தவர்களை வீழ்த்தினர்.

இதேபோன்று, ராக்கெட் வீச்சு மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்திய பள்ளி ஒன்றையும் தகர்த்தனர். அந்த பள்ளியில் இருந்த ராக்கெட் ஏவும் குழிகள், பல்வேறு ஆயுதங்கள் மற்றும் பயங்கரவாதிகளை இஸ்ரேல் படையினர் தாக்கி அழித்தனர்.

இவை தவிர, பீரங்கி குண்டுகள் மற்றும் பீரங்கியை அழிக்கும் ஏவுகணைகளுக்கான ஏவு தளங்கள் ஆகியவையும் தாக்குதலில் அழிக்கப்பட்டன.

இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்ட செய்தியில், சுரங்க பகுதிகளில் நீண்டகாலம் தங்கி இருப்பதற்காக எதிரிகள் தயாராகி வருகின்றனர் என்பது தெரிகிறது. சுரங்கங்களில் உள்ள நீர் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் இதனை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்து உள்ளனர்.


Next Story