வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை... கொரிய தீபகற்பத்தில் பதற்றம்


வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை... கொரிய தீபகற்பத்தில் பதற்றம்
x

வட கொரியா ஒரே நாளில் அடுத்தடுத்து 3 ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது.

சியோல்,

கிழக்கு ஆசிய நாடான வட கொரியா அணு ஆயுதங்கள் வைத்திருப்பதை விரும்பாத அமெரிக்கா, பிராந்தியத்தில் உள்ள தனது நட்பு நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து அணு ஆயுதங்களை கைவிட வட கொரியாவுக்கு பல்வேறு வகைகளில் அழுத்தம் கொடுத்து வருகிறது.

ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத வட கொரியா, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை அச்சுறுத்தும் விதமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தடைகளை மீறி தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தி வருகிறது.

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா, இன்று காலை கிழக்கு கடற்கரையில் குறுகிய தூரம் சென்று தாக்கி அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தியுள்ளது. இன்று காலை 7.44 மணிக்கு இரண்டு ஏவுகணைகளை ஒரே நேரத்தில் சோதனை நடத்திய நிலையில், 37 நிமிடங்கள் கழித்து மேலும் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியதாக தெரியவந்துள்ளது.

இன்று காலை ஏராளமான ஏவுகணைகளை வட கொரியா பரிசோதனை செய்ததை கண்டறிந்துள்ளோம் என தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இது கொரிய தீபகற்பத்தின் அமைதிக்கு மிரட்டல் எனவும் தெரிவித்துள்ளது. அமெரிக்கா உதவியுடன் எந்தவொரு ஆத்திரமூட்டும் செயலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

தென்கொரியா- அமெரிக்கா இணைந்து சமீபத்தில் 11 நாட்கள் கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டது. இந்த ராணுவ பயிற்சி கடந்த 14ம் தேதி முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story