செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட டிரோன்கள், ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்திய அமெரிக்கா..!!


செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட டிரோன்கள், ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்திய அமெரிக்கா..!!
x

கோப்புப்படம்

தினத்தந்தி 26 Dec 2023 11:04 PM GMT (Updated: 27 Dec 2023 7:58 AM GMT)

ஹவுதிகளால் ஏவப்பட்ட பல ஆளில்லா விமானங்களையும், ஏவுகணைகளையும் அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக பென்டகன் கூறுகிறது,

வாஷிங்டன்,

இஸ்ரேல் ராணுவம்-காசாவின் ஹமாஸ் ஆயுதக் குழு இடையிலான போா் கடந்த அக். 7ந் தேதி தொடங்கியதிலிருந்து இந்த விவகாரத்தில் பேசுபொருள் ஆகியிருக்கும் மற்றொரு அமைப்பு ஹவுதி.

செங்கடலில் இஸ்ரேலை நோக்கிப் பயணிக்கும் அல்லது இஸ்ரேலிலிருந்து பயணிக்கும் சரக்கு கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்திவருவதன் மூலம் உலக நாடுகளை கவலைகொள்ளச் செய்திருப்பவர்கள் ஏமனை தலைமையிடமாக கொண்ட இந்த ஹவுதி கிளா்ச்சியாளா்கள்.

உலகின் பிரதான கிழக்கு-மேற்கு வா்த்தக வழித்தடமாக செங்கடல் அமைந்துள்ளது. இந்தச் செங்கடலில் வா்த்தக கப்பல்கள் மீது ஹவுதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தி வருவதன் மூலம் சூயஸ் கால்வாயை அணுகுவது பெரும் ஆபத்தாக மாறியுள்ளது. சூயஸ் கால்வாய் வழியாக ஆசியாவுடன் ஐரோப்பாவையும், வட அமெரிக்காவையும் இணைக்கும் முக்கிய வா்த்தகப் பாதையை ஹவுதி அமைப்பினா் சீா்குலைத்துள்ளனா். இந்தப் பாதையையே பல கப்பல்கள் தவிா்க்கத் தொடங்கியுள்ள நிலையில், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயா்வுக்கும் வழிவகுத்துள்ளது.

இந்நிலையில் செங்கடல் பகுதியைக் கடந்த ஒரு கப்பல் மீது ராக்கெட் மற்றும் டிரோன் உள்ளிட்ட தாக்குதல்களை ஹவுதி அமைப்பினா் நடத்தியதாகவும், அதனை முறியடிக்கும் விதமாக அமெரிக்க ராணுவப் படைகள் சுட்டு வீழ்த்தியதாகவும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. 10 மணி நேர கால இடைவெளியில் 12 டிரோன்கள், மூன்று கப்பல் எதிர்ப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் இரண்டு தரைவழி தாக்குதல் ஏவுகணைகளை கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் அந்தபகுதியில் உள்ள கப்பல்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் எந்த நபர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.


Next Story