அபுதாபியில் இந்து கோவில் நாளை மறுநாள் திறப்பு - பிரதமர் மோடி பங்கேற்பு


அபுதாபியில் இந்து கோவில் நாளை மறுநாள் திறப்பு - பிரதமர் மோடி பங்கேற்பு
x

அபுதாபியில் நாளை மறுநாள் இந்து கோவில் திறக்கப்பட உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

அபுதாபி,

இந்திய பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டு அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டார். அப்போது அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக மோடியின் வேண்டுகோளை ஏற்று அபுதாபியில் இந்துகோவில் கட்டுவதற்கு அமீரக அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து துபாய் - அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா அருகே முரைக்கா பகுதியில் இந்து கோவில் கட்ட 55 ஆயிரம் சதுர அடி இடம் அபுதாபி அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, 2018ம் ஆண்டு கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதமர் மோடி துபாயில் இருந்து காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார். இதையடுத்து, கோவில் கட்டும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவில் நாளை மறுதினம் கும்பாபிஷேகத்துடன் திறக்கப்பட உள்ளது. கோவில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

கோவில் திறப்பு விழா நிகழ்ச்சிக்காக குஜராத் பிஏபிஎஸ் அமைப்பின் தலைமை குரு மாஹாந்த் சுவாமி மஹராஜ் அமீரகத்துக்கு வந்துள்ளார். நாளை மறுநாள் காலை கும்பாபிஷேக யாக பூஜைகளுடன், சிலைகளுக்கு பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டு பூஜைகளை நடத்தி வைக்கிறார். அபுதாபி இந்து கோவிலை பிரதமர் மோடி நாளை மறுநாள் மாலை பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கிறார்.

இந்த கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பிஏபிஎஸ் அமைப்பு சார்பில் 12 நாள் நடக்கும் நல்லிணக்க திருவிழா பக்தி துலாபாரத்துடன் இன்று தொடங்கியது. இதில் அந்த கோவிலில் மூல கடவுளான சுவாமிநாராயணன் சிலைக்கு பூஜை செய்யப்பட்டு வருகிறது.

அபுதாபி இந்து கோவில் நாளை மறுதினம் திறக்கப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் அடுத்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி முதல் கோவிலை பார்வையிடலாம் என அபுதாபி பிஏபிஎஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இதற்காக அந்த அமைப்பின் இணையதளம் மற்றும் பெஸ்டிவல் ஆப் ஹார்மனி என்ற செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story