எகிப்து; 11-ம் நூற்றாண்டை சேர்ந்த அல்-ஹகீம் மசூதியை பார்வையிட்டார் பிரதமர் மோடி


எகிப்து; 11-ம் நூற்றாண்டை சேர்ந்த அல்-ஹகீம் மசூதியை பார்வையிட்டார் பிரதமர் மோடி
x

எகிப்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் மோடி, 11-ம் நூற்றாண்டை சேர்ந்த அல்-ஹகீம் மசூதியை இன்று பார்வையிட்டார்.

கெய்ரோ,

பிரதமர் மோடியின் 4 நாட்கள் அமெரிக்க பயணம் நிறைவடைந்ததும், அவர் எகிப்து நாட்டுக்கு நேற்று புறப்பட்டு சென்றார். அவர் எகிப்தில் 24 மற்றும் 25 ஆகிய இரு தினங்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக, கெய்ரோ விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடியை எகிப்து பிரதமர் முஸ்தபா மத்தவுலி நேரில் சென்று வரவேற்றார்.

எகிப்து சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் அப்துல் பஹத் எல் சிசியை இன்று சந்திக்கிறார். கடந்த ஜனவரியில் குடியரசு தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எகிப்து அதிபர் அப்துல் பஹத் எல் சிசி அப்போது, எகிப்துக்கு வரும்படி பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்ததன் பேரில் பிரதமரின் இந்த பயணம் அமைந்து உள்ளது.

பிரதமர் மோடி எகிப்து நாட்டிற்கு சென்றடைந்ததும் தலைநகர் கெய்ரோ நகரில் உள்ள ஓட்டலில் அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். வந்தே மாதரம் என்றும், மோடி மோடி என்றும் கோஷங்களை எழுப்பினர்.

இந்திய சமூக மக்கள் பலரும் பிரதமர் மோடியை வரவேற்க திரண்டிருந்தனர். அதில், சிறுவர், சிறுமிகளும் இருந்தனர். பலர் இந்திய திரைப்பட பாடல்களை பாடியும், கலாசார நிகழ்ச்சிகளை வழங்கியும் அவரை வரவேற்றனர். அவர்களை பிரதமர் மோடி வாழ்த்தியதுடன், அவர்களுடன் சிறிது நேரம் உரையாடினார்.

இந்த பயணத்தில் பிரதமர் மோடி மற்றும் எகிப்து பிரதமர் முஸ்தபா மத்தவுலி இடையே முதன்முறையாக வட்டமேசை மாநாடு ஒன்றும் நடைபெற்றது.

அவர் இந்த பயணத்தின்போது, கெய்ரோ நகரில் உள்ள அல்-ஹகீம் மசூதியில் இன்று அரை மணிநேரம் செலவிடுகிறார் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி, அவர் மசூதியை இன்று பார்வையிட்டார். 11-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த மசூதியானது தாவூதி போரா சமூகத்தினரின் முக்கியத்துவம் வாய்ந்த கலாசார மையம் ஆகும். பிரதமர் மோடியின் வருகையையொட்டி இந்த மசூதி, மீட்டெடுக்கப்பட்டு உள்ளதும் முக்கியம் பெறுகிறது.

பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த அல்-ஹகீம் மசூதியானது, இந்திய மற்றும் எகிப்திய கலாசாரங்கள் ஒன்றிணைந்து இருப்பதனை வெளிப்படுத்துவதுடன், மத மற்றும் வரலாற்று முக்கியத்துவத்திற்கான ஒரு கலங்கரை விளக்கம் ஆகவும் சேவையாற்றி வருகிறது.

இதன்பின்னர், பிரதமர் மோடி எகிப்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரையும் சந்தித்து உரையாட இருக்கிறார். இரு தரப்பு மக்களின் உறவுகளை வளர்ப்பது மட்டுமின்றி, இரு நாடுகளுக்கு இடையே பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாசார பரிமாற்றத்திற்கு பங்காற்றுவதற்கு ஏற்ப, இந்திய வம்சாவளியினருக்கு ஒரு தளத்தினையும் அவரது இந்த சந்திப்பு வழங்கும்.


Next Story