நடைபயிற்சி சென்ற பெண்களிடம் பாலியல் அத்துமீறல்...!! சீரியல் கிஸ்சருக்கு நூதன தண்டனை


நடைபயிற்சி சென்ற பெண்களிடம் பாலியல் அத்துமீறல்...!! சீரியல் கிஸ்சருக்கு நூதன தண்டனை
x
தினத்தந்தி 10 Jun 2023 8:17 AM GMT (Updated: 10 Jun 2023 8:48 AM GMT)

இங்கிலாந்தில் நாயுடன் நடைபயிற்சி சென்ற 6-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சீரியல் கிஸ்சருக்கு நூதன தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் நகர ஷெரீப் கோர்ட்டில் விசித்திர வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அதில், மிர்சா முகமது சயீத் (வயது 64) என்ற முதியவர் மீது 16 வயது சிறுமி உள்பட பெண்கள் பலர் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர்.

இதன்படி, காலையிலேயே கையில் கேமிராவுடன் மிர்சா வந்து விடுவார். வேலைக்கு செல்வோர், வளர்ப்பு நாயுடன் நடைபயிற்சி செய்பவர்கள் என பெண்கள் போகிற வழியில் பின் தொடர்ந்து செல்லும் அவர், அவர்களிடம் கேமிராவை கொடுத்து தன்னை படம் எடுத்து தர சொல்வார்.

அவர்களும் அதனை செய்து முடித்ததும், 2 பேரும் சேர்ந்து படம் எடுத்து கொள்ளலாம் என அடுத்து கூறுவார். இப்போது அந்த பெண்கள் தயக்கத்துடன் நிற்கும்போது, அவர்களை பற்றி கொண்டு, கையில் முத்தமிட்டு உள்ளார். தொடர்ந்து, வாயிலும் முத்தமிட முயன்று உள்ளார்.

இந்த வழக்கில் உறுதியான சான்றுகள் இல்லாமல் விசாரணை தொடர்ந்து நீண்டு கொண்டே சென்றது. இந்நிலையில், 7 பெண்களிடம் இந்த பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட விசயங்களை மிர்சா ஒப்பு கொண்டுள்ளார். எனினும், வேறு எட்டு பாலியல் குற்றச்சாட்டுகளுக்கும், தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என மறுத்து உள்ளார்.

இதனை தொடந்து, அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் சூழல் இருந்தது. எனினும், அதில் இருந்து தப்பிக்கும் ஒரு மாற்று வழியை அவர் தேர்ந்தெடுத்து உள்ளார்.

இதன்படி, அவர் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை வீட்டு காவலில் இருப்பார். மின்னணு சாதனம் உதவியுடன் அவர் கண்காணிக்கப்படுவார். 189 நாட்களுக்கு அவர் இந்த வீட்டு சிறையில் இருப்பார்.

2 ஆண்டுகளுக்கு சமூக பணியிலும் அவர் ஈடுபட வேண்டும். இதனை ஒருவர் மேற்பார்வை செய்வார். சம்பளம் இல்லாமல் 252 மணிநேரம் வேலையிலும் ஈடுபட அவருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் சிறை தண்டனையில் இருந்து அவர் தப்பியுள்ளார்.


Next Story