பிலிப்பைன்ஸில் லைவ் நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு; தொகுப்பாளர் உயிரிழப்பு


பிலிப்பைன்ஸில் லைவ் நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு; தொகுப்பாளர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 6 Nov 2023 4:45 AM GMT (Updated: 6 Nov 2023 6:23 AM GMT)

ஜுமலன் அணிந்திருந்த தங்க நெக்லசை மர்ம நபர் பறிக்க முற்படுகிறார். அதன்பின் சம்பவ பகுதியில் இருந்து தப்பி ஓடுகிறார்.

மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டில் செயல்பட்டு வரும் கலம்பா கோல்டு எப்.எம்.மில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் ஜுவான் ஜுமலன் (வயது 57). பிலிப்பைன்ஸின் மிசாமிஸ் ஆக்சிடென்டல் மாகாணத்தில் கலம்பா நகரில் உள்ள வீட்டில் அவர் இருந்தபோது, மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் புகுந்துள்ளார்.

அப்போது ஜுவான், லைவ் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி கொண்டு இருந்துள்ளார். மக்கள் அதனை கவனித்து கொண்டிருந்தபோது, மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்.

இந்த சம்பவத்தில் ஜுவான் படுகாயமடைந்து உயிரிழந்து விட்டார். ஜானி வாக்கர் என்ற பெயரில் அறியப்படும் ஜுவான், அவருடைய இல்லத்திலேயே வானொலி நிலையம் அமைத்து செயல்படுத்தி வந்து இருக்கிறார்.

இதுபற்றி தடயவியல் துறையினர், கலம்பா போலீசார் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக சிறப்பு புலனாய்வு அதிரடி படை ஒன்றும் அமைக்கப்படும். விரைவாக வழக்கு விசாரிக்கப்படும் என போலீஸ் மண்டல அலுவலகத்தின் மண்டல இயக்குநர் ரிகார்டோ லயுக் கூறியுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினான்ட் மார்கஸ் ஜூனியர் கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்த லைவ் நிகழ்ச்சியின்போது பதிவான வீடியோ, பேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. எனினும், நிகழ்ச்சியை கவனித்தவர்களில் சிலர் அதனை பதிவு செய்துள்ளனர்.

அதில், ஜுமலன் அணிந்திருந்த தங்க நெக்லசை மர்ம நபர் பறிக்க முற்படுகிறார். அதன்பின் சம்பவ பகுதியில் இருந்து தப்பி ஓடுகிறார். பத்திரிகையாளர்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகளில் ஒன்றாக பிலிப்பைன்ஸ் உள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது.

அதிபர் மார்கஸ் 2022-ம் ஆண்டு ஜூனில் பதவியேற்றதில் இருந்து கொல்லப்பட்ட 4-வது பத்திரிகையாளராக ஜுமலன் உள்ளார் என மணிலா டைம்ஸ் என்ற செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.


Next Story