அமெரிக்காவில் வாஷிங்டனில் துப்பாக்கி சூடு; பலர் பலி என அச்சம்


அமெரிக்காவில் வாஷிங்டனில் துப்பாக்கி சூடு; பலர் பலி என அச்சம்
x

அமெரிக்காவில் வடகிழக்கு வாஷிங்டனில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.



வாஷிங்டன்,



அமெரிக்காவில் வடகிழக்கு வாஷிங்டனில் கேபிட்டல் ஹில் பகுதியில் இருந்து சற்று தொலைவில் நேற்றிரவு 8.30 மணியளவில் திடீரென துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதனை, தீயணைப்பு துறையின் செய்தி தொடர்பாளர் விட்டோ மேகியோலோ தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், மெட்ரோபொலிடன் நகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்தியில், துப்பாக்கி சூட்டில் பலர் பலியாகி இருக்க கூடும் என தெரிவித்து உள்ளது. எனினும், சரியான எண்ணிக்கை அடங்கிய விவரங்களை வெளியிடவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் யாரும் அடையாளம் காணப்படவில்லை. சந்தேகத்திற்குரிய தகவல் எதுவும் வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காவல் துறை செய்தி தொடர்பாளர் சீன் ஹிக்மேன் கூறும்போது, சம்பவம் நடந்த தெருவில் ஆம்புலன்சுகள் வரிசையாக சென்றன. அந்த பகுதியில் நின்றிருந்த பெண் ஒருவர், 15 முறை துப்பாக்கி சூடு நடந்த சத்தம் கேட்டது என கூறினார் என்று தெரிவித்து உள்ளார்.

நடப்பு ஆண்டில், அமெரிக்காவில் பெரிய அளவில் 381 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இது நாளொன்றுக்கு சராசரியாக 1.7க்கும் கூடுதலான பெரிய அளவிலான துப்பாக்கி சூடு எண்ணிக்கையாகும்.

அந்நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறைக்கு வேதனை தெரிவித்த அதிபர் பைடன், குழந்தைகள், குடும்பத்தினரை பாதுகாக்க தாக்குதல் நடத்த கூடிய ஆயுதங்களை தடை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என கூறினார். இதனை தொடர்ந்து கடந்த ஜூன் 22ந்தேதி துப்பாக்கி பாதுகாப்பு மசோதா கொண்டு வருவதற்கான முடிவை அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

அமெரிக்காவில் நேற்றும் இதுபோன்றதொரு வன்முறை சம்பவம் நடந்தது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஆர்லேண்டோ நகரில் மக்கள் கூட்டத்தில் திடீரென ஒருவருக்கொருவர் மோதல் ஏற்பட்டு வன்முறை பரவியது.

இதில், அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்து கூட்டத்தினரை நோக்கி சுட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் 7 பேர் காயமடைந்தனர். சமீபத்தில் டெக்சாஸில் ஹால்தம் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். 3 அதிகாரிகள் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.


Next Story