பாகிஸ்தானில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு; 1 லிட்டர் பால் ரூ.210


பாகிஸ்தானில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு; 1 லிட்டர் பால் ரூ.210
x

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியான சூழலில் 1 லிட்டர் பால் ரூ.210 மற்றும் சிக்கன் விலை ரூ.780 வரை உயர்ந்து உள்ளது.



கராச்சி,


ஆசிய நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்த கூடிய ரொட்டி, பால் பொருட்கள் மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.

பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியுடன், கடந்த 2022-ம் ஆண்டு ஜூனில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. எரிசக்தி துறையில் ஏற்பட்ட பாதிப்பால், எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறையாலும் அந்நாடு சிக்கி தவித்து வருகிறது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, அமெரிக்கா மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகளிடம் பாகிஸ்தான் கடன் கேட்டு உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடமும் (ஐ.எம்.எப்.) கடன் வாங்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு உள்ளது. இதற்காக சி.டி.எம்.பி. எனப்படும் கடன் மேலாண் திட்டம் ஒன்றை வகுத்து அதனை ஐ.எம்.எப்.க்கு அனுப்பியது. ஆனால், அதனை ஆய்வு செய்த அந்த அமைப்பு அத்திட்டத்தினை ஏற்காமல் நிராகரித்து விட்டது.

இதனால், பொருளாதார சிக்கலில் இருக்கும் அந்நாட்டின் விலைவாசியும் கடுமையாக உயர்ந்து அது மக்களுக்கு பெரும் சுமையை ஏற்றி உள்ளது. இதன்படி, சில்லரை விற்பனையில் ஒரு லிட்டர் பால் விலை ரூ.190-ல் இருந்து ரூ.210 ஆகவும், சிக்கன் இறைச்சி விலை ரூ.650-ல் இருந்து ரூ.780 வரை உயர்ந்து உள்ளது.

பிராய்லர் கோழி விலை ரூ.480 முதல் ரூ.500 வரை உயர்ந்து உள்ளது. இதேபோன்று இறைச்சி விலையும் கிலோ ஒன்றுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,100 வரை உயர்ந்து உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்கான பாகிஸ்தானின் முயற்சிக்கான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த சூழலில், இந்த நிலை ஏற்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பில் சிக்கி 1,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 20 லட்சம் பேர் வீடுகளை இழந்து விட்டனர். இந்த சூழலில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களால் அந்நாட்டு மக்கள் பரிதாப நிலையில் உள்ளனர்.


Next Story