"திருமணத்திற்கு செல்வது போல் உடை அணிகிறார்கள்" - பெண்களுக்கு உயர்கல்வி மறுக்கப்பட்டது குறித்து ஆப்கானிஸ்தான் மந்திரி விளக்கம்


திருமணத்திற்கு செல்வது போல் உடை அணிகிறார்கள் - பெண்களுக்கு உயர்கல்வி மறுக்கப்பட்டது குறித்து ஆப்கானிஸ்தான் மந்திரி விளக்கம்
x

Image Courtesy : AFP

சில அறிவியல் படிப்புகள் பெண்களுக்கு உகந்ததாக இல்லை என்று ஆப்கானிஸ்தானின் உயர்கல்வித்துறை மந்திரி நேடா முகமது நதீம் தெரிவித்துள்ளார்.

காபுல்,

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தலீபான் அமைப்பினர், பெண்களுக்கான சுதந்திரத்தை மெல்ல மெல்ல பறித்து வருவதாக உலக நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. இந்த நிலையில் அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் சேர்ந்து படிக்க தலீபான்கள் தடை விதித்துள்ளனர்.

தலீபான்களின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து ஆப்கானிஸ்தானின் உயர்கல்வித்துறை மந்திரி நேடா முகமது நதீம் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், உயர்கல்வி பயிலும் பெண்களுக்கான நடைமுறைகள் முறையாக அமல்படுத்தப்படவில்லை எனவும், ஹிஜாப் விதிகளை முறையாக பின்பற்றாத பெண்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் போது திருமணத்திற்கு செல்வது போல் உடை அணிகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சில அறிவியல் படிப்புகள் பெண்களுக்கு உகந்ததாக இல்லை என்று குறிப்பிட்ட அவர், பொறியியல் உள்ளிட்ட சில படிப்புகள் மாணவிகளின் கண்ணியம் மற்றும் ஆப்கானிய கலாச்சாரத்திற்கு ஏற்றதாக இல்லை என்று விளக்கமளித்துள்ளார். அதோடு ஆண்களின் துணை இன்றி சில பெண்கள் தனியாக பயணம் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story