டுவிட்டர் நிறுவனம் அதிக கடன் சுமையில் உள்ளது-எலான் மஸ்க்


டுவிட்டர் நிறுவனம் அதிக கடன் சுமையில் உள்ளது-எலான் மஸ்க்
x

டுவிட்டர் நிறுவனம் அதிக கடன் சுமையில் உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

சான் பிரான்சிஸ்கோ,

டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் எலான் மஸ்க் பல்வேறு விதமான மாற்றங்களை அந்நிறுவனத்தில் கொண்டு வந்துள்ளார். முதலில் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் நீக்கப்பட்ட சிலர் மீண்டும் டுவிட்டரில் சேர்க்கப்பட்டனர். இதில் பதிவிடும் கருத்துகள் தொடர்பாக மாற்றங்களும் கொண்டு வரப்பட்டன. இதனால் விளம்பரதாரர்கள் வழங்கும் விளம்பரங்கள் படிபடியாக குறைந்தது.

முன்னதாக மஸ்க் , டுவிட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேறிய விளம்பரதாரர்கள் மீண்டும் வருவார்கள். நிறுவனம் லாபப் பாதையில் பயணிக்கும் என கடந்த ஏப்ரலில் கூறியிருந்தார். அதன் பின், விளம்பரத் துறையில் அனுபவமுள்ள லிண்டா யாக்காரினோவை புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்தார். இருப்பினும், ஒரு நாளில் இத்தனை டுவிட்களை மட்டும் தான் பயனாளர்கள் பார்க்க முடியும் என டுவிட்டரில் சில கட்டுப்பாடுகளை விதித்தது பயனாளர்களை வருத்தமடையச்செய்தது.

தற்போது டுவிட்டரில் விளம்பரங்கள் பாதியாக குறைந்ததால் நிறுவனம் இன்னும் நஷ்டத்திலேயே இயங்கிக் கொண்டிருப்பதாக எலான் மஸ்க் கூறியுள்ளார். வணிக ஆலோசனையை வழங்கும் டுவிட்டுக்கான பதிலில் அவர் இவ்வாறு கூறினார்

அதில் அவர் கூறியிருப்பதாவது:

டுவிட்டருக்கான விளம்பரங்கள் 50 சதவிகிதம் குறைந்ததால் நாங்கள் இன்னும் நஷ்டத்தில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறோம். அதேபோல டுவிட்டருக்கு அதிக அளவிலான கடன்சுமை இருக்கிறது. வியாபாரம் சார்ந்த மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு முன்பாக டுவிட்டரை லாபப்பாதைக்கு கொண்டு வரவேண்டும் எனக்கூறியுள்ளார்.

இந்த நிலையில், டுவிட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் திரெட்ஸ் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story