கிரிமீயா பகுதியில் வெடிபொருள் கிடங்கு மீது உக்ரைனின் ஆளில்லா விமானம் தாக்குதல்


கிரிமீயா பகுதியில் வெடிபொருள் கிடங்கு மீது உக்ரைனின் ஆளில்லா விமானம் தாக்குதல்
x

ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமீயா பகுதியில் வெடிபொருள் கிடங்கு மீது உக்ரைனின் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியது.

கீவ்,

உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா கடந்த கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் போர் தொடுத்தது. இந்த படையெடுப்பால் உலக நாடுகளில் விலைவாசி உயர்வு, எரிபொருள் பற்றாக்குறை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.

போரை நிறுத்த உலக நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தன. தூதரக அளவிலான பேச்சுவார்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்தது.

ஓராண்டை கடந்தும் போர் தீவிரமடைந்து உள்ள சூழலில், உக்ரைனின் கடல் துறைமுகங்களான ஒடிசா மற்றும் சோர்னோமோர்ஸ்க் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை கொண்டு ரஷியா தாக்கி உள்ளது என சமீபத்தில் உக்ரைன் குற்றச்சாட்டு கூறியது.

இந்த நிலையில், ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமீயா பகுதியில் வெடிபொருள் கிடங்கு மீது உக்ரைனின் ஆளில்லா விமானம் திடீர் தாக்குதல் நடத்தி உள்ளது.

இதுபற்றிய வீடியோவும் வெளியானது. கிரிமீயாவின் மைய நகரான ஒக்தியாபிரிஸ்க் நகரில் உள்ள ரெயில் நிலையத்திற்கு சற்று தொலைவில் இருந்து கரும்புகை வான் வரை கிளம்பி சென்றது.

இதேபோன்று மற்றொரு வீடியோவில், 3 வெடிகுண்டு சத்தங்கள் கேட்கின்றன.

இதுபற்றி ரஷியாவால் நியமிக்கப்பட்ட அந்த கிடங்கின் தலைவரான செர்கே ஆக்சியோனோவ் என்பவர் கூறும்போது, ஆளில்லா விமானம் ஒன்று வெடிபொருள் சேமித்து வைக்கும் கிடங்கு ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியது.

இதனால், அதனை சுற்றி 5 கி.மீ. தொலைவில் உள்ள நபர்கள் ஒவ்வொருவரையும் வெளியேற்ற வேண்டிய உத்தரவை பிறப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக பல ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன என கூறியுள்ளார். இந்த தகவலை சி.என்.என். வெளியிட்டு உள்ளது. இதனால், ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை என அவர் கூறியுள்ளார்.

எனினும், உக்ரைனின் கார்கிவ் பகுதிக்கு வடகிழக்கே குபியான்ஸ்க் நகர் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 2 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என உக்ரைன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Next Story