உக்ரைனுக்கு மேலும் 12 பில்லியன் டாலர் நிதியுதவி - அமெரிக்கா அறிவிப்பு


உக்ரைனுக்கு மேலும் 12 பில்லியன் டாலர் நிதியுதவி - அமெரிக்கா அறிவிப்பு
x

உக்ரைனுக்கு மேலும் 12 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க அமெரிக்க செனட் சபை ஒப்புதல் வழங்கி உள்ளது.

வாஷிங்டன்,

உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் 6 மாதங்களை கடந்த நிலையிலும் ரஷியாவுக்கு உக்ரைனும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்தப் போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். போரில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிதி மற்றும் ராணுவ உதவியை அளித்து வருகின்றன.

போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது. இதற்கிடையே, இந்த மாத தொடக்கத்தில் 11.7 பில்லியன் டாலர்களை புதிய அவசர கால ராணுவ மற்றும் பொருளாதார கட்டமைப்புக்காக உக்ரைனுக்கு வழங்குமாறு அமெரிக்க பாராளுமன்றத்தை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில், அதிபர் ஜோ பைடனின் வேண்டுகோளை ஏற்று போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைன் நாட்டிற்கு பொருளாதார மற்றும் இராணுவ உதவிக்கு உதவும் வகையில் மேலும் 12 பில்லியன் டாலர்கள் நிதியுதவி வழங்க அமெரிக்க செனட் சபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.


Next Story