அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு- 3 பேர் பலி


அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு- 3 பேர் பலி
x
தினத்தந்தி 7 Dec 2023 7:59 AM GMT (Updated: 7 Dec 2023 8:01 AM GMT)

நெவாடா பல்கலைக்கழகத்தில் 2017 ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கி சூட்டில் 60 பேர் உயிரிழந்தனர்.

நியூயார்க்,

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நெவாடா பல்கலைக்கழகம் உள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று காலை இந்த பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் திடீர் என்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். அதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கல்லூரியில் இருந்த மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். பின்னர் அந்த மர்ம நபர் அங்கு இருப்பதை அறிந்து அவரை சுட்டு வீழ்த்தினர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு பெண் கூறியபோது, "நான் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அந்நேரத்தில் மூன்று முறை துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் போலீசார் வந்த பிறகும் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் நான் அடித்தளத்திற்கு ஓடினேன். அங்கு 20 நிமிடங்கள் பதுங்கி இருந்தேன்" என்றார்.

தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் பல்கலைக்கழகம் மற்றும் அதனை சுற்றியுள்ள தெற்கு நெவாடா பகுதி நிறுவனங்களை நேற்று முழுவதும் மூட உத்தரவிடப்பட்டது.

இச்சம்பவம் போன்று கடந்த 2017 ஆம் ஆண்டு அந்த பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 60 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story