அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சி வேட்பாளர் யார்..? கருத்துக் கணிப்பில் முந்திய டிரம்ப்


அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சி வேட்பாளர் யார்..? கருத்துக் கணிப்பில் முந்திய டிரம்ப்
x

டிரம்ப் மீது பாராளுமன்ற வன்முறை வழக்கு, தேர்தல் மோசடி வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

வாஷிங்டன்:

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு தலைவர்களிடையே கடும் போட்டி உள்ளது. முன்னாள் அதிபரும் குடியரசு கட்சியை சேர்ந்தவருமான டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்து, கட்சியினரிடையே ஆதரவு திரட்ட தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதேபோல் குடியரசு கட்சி வேட்பாளர் போட்டி களத்தில் தென்கரோலினா முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலே, இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி, புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிங், நியூஜெர்சி முன்னாள் கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி ஆகியோரும் உள்ளனர்.

இந்த நிலையில் குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளர்களுக்கான ஆதரவு தொடர்பாக தனியார் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது. இதில் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் உள்ளார். அவருக்கு 61 சதவீத குடியரசு கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நிக்கி ஹாலே, ரான் டிசாண்டிங் ஆகியோருக்கு தலா 11 சதவீதம் பேரும், விவேக் ராமசாமிக்கு 5 சதவீதம் பேரும், கிறிஸ் கிறிஸ்டிக்கு 2 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 8 சதவீதம் பேர் தங்களது ஆதரவை முடிவு செய்யவில்லை என்று தெரிவித்தனர்.

டிரம்ப் மீது பாராளுமன்ற வன்முறை வழக்கு, தேர்தல் மோசடி வழக்கு உள்பட பல்வேறு வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. அதில் அவர் ஆஜராகி வருகிறார். ஆனாலும் குடியரசு கட்சியினர் மத்தியில் டிரம்புக்கு அமோக ஆதரவு இருப்பது இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. டிரம்ப் மீதான கிரிமினல் குற்றச்சாட்டுகளை வைத்து குடியரசுக் கட்சி வாக்காளர்கள் திசைதிருப்பப்படுவதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.


Next Story