உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் ரஷியா பேரழிவை சந்திக்கும் - அமெரிக்கா கடும் எச்சரிக்கை


உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் ரஷியா பேரழிவை சந்திக்கும் - அமெரிக்கா கடும் எச்சரிக்கை
x

Image Courtacy: AFP

உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் ரஷியா பேரழிவை சந்திக்கும் என்று அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கீவ்,

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த 7 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இந்த சூழலில் உக்ரைன் மீதான போரை மேலும் தீவிரப்படுத்த ரஷிய அதிபர் புதின் முடிவு செய்துள்ளார்.

அதன்படி உக்ரைனில் சண்டையிட சுமார் 3 லட்சம் ரஷியர்களை அணிதிரட்ட அண்மையில் உத்தரவு பிறப்பித்தார். அதோடு போரில் மேற்கத்திய நாடுகளால் ரஷியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது எனவும் புதின் எச்சரித்துள்ளார்.

இதனிடையே உக்ரைனில் ரஷியா ஆக்கிரமித்து வைத்துள்ள 4 பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பது குறித்த பொதுவாக்கெடுப்பு நிறைவு பெற்றதும் ரஷிய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் ரஷியா பேரழிவை சந்திக்கும் என அமெரிக்கா கடுமையாக எச்சரித்துள்ளது.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சல்லிவன் இதுபற்றி கூறுகையில், "போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்ற மறைமுகமான அச்சுறுத்தல்களுக்கு ரஷியா அதிக விலை கொடுக்க நேரிடும். ரஷியா இந்த கோட்டைத் தாண்டினால் ரஷியாவுக்கு பேரழிவு விளைவுகள் ஏற்படும். அமெரிக்கா தீர்க்கமாக பதிலளிக்கும். இந்த நடவடிக்கையை எடுப்பதில் இருந்து ரஷியாவைத் தடுக்க தேவையானதை நாங்கள் செய்வோம்" என கூறினார்.

இதனிடையே அமெரிக்கா இந்த எச்சரிக்கையை வெளியிட்ட சில மணி நேரத்தில் உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தின் மீது ரஷியா 'டிரோன்' தாக்குதல் நடத்தியது. இதில் துறைமுகத்தில் மிகப்பெரிய அளவில் தீப்பிடித்ததாக கூறப்படும் நிலையில் சேத விவரங்கள் பற்றி உடனடி தகவல்கள் இல்லை.


Next Story