உக்ரைனுக்கு நீண்ட தூர அதிநவீன ராக்கெட் அமைப்புகளை அனுப்பும் அமெரிக்கா - ஜோ பைடன் அறிவிப்பு


உக்ரைனுக்கு நீண்ட தூர அதிநவீன ராக்கெட் அமைப்புகளை அனுப்பும் அமெரிக்கா - ஜோ பைடன் அறிவிப்பு
x

Image Courtesy : AFP 

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் இராஜ தந்திரத்தின் மூலமே முடிவடையும் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்து வரும் போர் 100-வது நாளை எட்ட உள்ளது. தற்போது கிழக்கு உக்ரைனில் உள்ள மற்ற நகரங்களிலும் ரஷிய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் கிழக்கு உக்ரைனின் லுஹான்ஸ்க் மாகாணத்தில் போர் குறித்து செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டு பத்திரிகையாளர் ஒருவர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் உக்ரைனுக்கு நீண்ட தூர அதிநவீன ராக்கெட் அமைப்புகளை அமெரிக்கா அனுப்பவுள்ளதாக அந்த நாட்டின் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ரஷியாவிற்குள் தாக்க ஏவுகணைகளை பயன்படுத்த மாட்டோம் என்று உக்ரைன் உறுதியளித்ததை அடுத்து, 80 கிமீ (50 மைல்) தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கக்கூடிய உயர் இயக்கம் பீரங்கி ராக்கெட் அமைப்புகளை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளதாவது:

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு இராஜதந்திரத்தின் மூலமே முடிவடையும். ஆனால் பேச்சுவார்த்தையின் போது உக்ரைனுக்கு அதிக செல்வாக்கைக் கொடுக்க அமெரிக்கா குறிப்பிடத்தக்க ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் வழங்க முடிவு செய்துள்ளது.

அதனால்தான் உக்ரைனுக்கு இன்னும் மேம்பட்ட ராக்கெட் அமைப்புகள் மற்றும் வெடிமருந்துகளை வழங்க நான் முடிவு செய்துள்ளேன், அவை எதிரிகளின் முக்கிய இலக்குகளை இன்னும் துல்லியமாக தாக்க உதவும்.

இவ்வாறு பைடன் தெரிவித்துள்ளார்.


Next Story