போர் எதிரொலி: இஸ்ரேலில் அனைத்து பள்ளி கூடங்களையும் வரும் நாட்களில் மூட ராணுவம் உத்தரவு


போர் எதிரொலி:  இஸ்ரேலில் அனைத்து பள்ளி கூடங்களையும் வரும் நாட்களில் மூட ராணுவம் உத்தரவு
x
தினத்தந்தி 10 Oct 2023 5:12 PM GMT (Updated: 11 Oct 2023 12:34 AM GMT)

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் குழுவினரிடையேயான சண்டையை முன்னிட்டு இஸ்ரேலில் அனைத்து பள்ளிகளையும் வரும் நாட்களில் மூட ராணுவம் உத்தரவிட்டு உள்ளது.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் முன்னறிவிப்பு எதுவுமின்றி கடந்த சனிக்கிழமை திடீரென தாக்குதல் தொடுத்தது. ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவியது. இந்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பதிலடி தரும் வகையில், 48 மணிநேரத்தில் 3 லட்சம் வீரர்களை இஸ்ரேல் குவித்து உள்ளது. இதுவரை இல்லாத வகையில் விரைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

1973-ம் ஆண்டு யோம் கிப்பூர் போரின்போது, 4 லட்சம் படை வீரர்கள் குவிக்கப்பட்டதே அதிக எண்ணிக்கையாக இருந்தது என டைம்ஸ் ஆப் இஸ்ரேல் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

இஸ்ரேல் மற்றும் காசா எல்லையில் ஏற்பட்டு வரும் தொடர் சண்டையில் 140 குழந்தைகள் உள்பட 800-க்கும் மேற்பட்டோர் இஸ்ரேலில் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், தி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தியில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத குழுவினர் இடையே தொடர்ந்து நடந்து வரும் சண்டையை முன்னிட்டு, இஸ்ரேல் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் வரவுள்ள நாட்களில் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்து உள்ளது.

இதுதவிர, நேதன்யாகுவுக்கு தெற்கே மற்றும் மத்திய நெகேவ் பகுதிக்கு வடக்கே வர்த்தக நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. வெடிகுண்டு புகலிடங்களுக்கான வசதிகள் உடனடியாக கிடைக்குமென்றால் மட்டுமே வர்த்தக நடவடிக்கைகளை செயல்படுத்தலாம் என ராணுவம் அனுமதித்து உள்ளது.

இதேபோன்று, இந்த பகுதிகளில், வெளியே 10 பேருக்கு கூடுதலாக ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டு உள்ளது. உள்ளரங்கங்களில் 50 பேருக்கு கூடுதலாக ஒன்றுகூடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.


Next Story