சீனாவுடனான உறவை தொடர கடும் முயற்சி செய்கிறோம்; ஆனால்... மத்திய வெளியுறவு மந்திரி பேட்டி


சீனாவுடனான உறவை தொடர கடும் முயற்சி செய்கிறோம்; ஆனால்... மத்திய வெளியுறவு மந்திரி பேட்டி
x

சீனாவுடனான உறவு பரஸ்பர மரியாதை, விருப்பம் மற்றும் உணர்திறன் அடிப்படையில் தொடர்ந்து பராமரிக்கப்படும் என மத்திய வெளியுறவு மந்திரி கூறியுள்ளார்.


வாஷிங்டன்,


அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர், நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா. பொது சபையின் உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டார். இதன்பின்னர், அந்நாட்டின் அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன் மற்றும் அதிபர் பைடன் நிர்வாகத்தில் உள்ள பிற முக்கிய உயரதிகாரிகளை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

இதேபோன்று, பென்டகனில் அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாய்டு ஆஸ்டினையும், மத்திய மந்திரி ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின், பல்வேறு காரணங்களுக்காக சர்வதேச சூழ்நிலை மிகவும் சவாலாக உள்ள நிலையில், இந்தோ-பசிபிக்கின் ஸ்திர தன்மை, பாதுகாப்பு மற்றும் வளம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என பென்டகனில் ஆற்றிய உரையின்போது குறிப்பிட்டார்.

இந்நிலையில் வாஷிங்டனில், சீனா மற்றும் இந்தியா இடையேயான சீரான உறவுகள் பற்றிய கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய மந்திரி, சீனாவுடனான உறவை தொடர நாங்கள் கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். ஆனால், அது பரஸ்பர உணர்திறன், பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்படும் என வலியுறுத்தி கூறினார்.

எனினும், இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் கூறும்போது, இந்திய-சீன எல்லை பகுதியில் நிலைமை முழுவதும் ஸ்திரதன்மையுடன் உள்ளது என கூறினார். 2020-ம் ஆண்டு ஜூனில் ஏற்பட்ட கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பின்பு, இரு தரப்பினரும் அவசரகால நிலையில் இருந்து விலகி சென்றுள்ளனர் என்றும் கூறினார்.

இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், ஒரு வெளிநாட்டு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஏதோ ஒரு விசயம் கூறுகிறார் என்றால், அதற்கு, அந்நாட்டுடன் தொடர்புடைய நாட்டின் வெளிநாட்டு அமைச்சக செய்தி தொடர்பாளர் என்ன கூறுகிறார் என்பதனையும் உற்றுநோக்க வேண்டும் என உங்களிடம் கேட்டு கொள்கிறேன் என்று பதிலளித்து உள்ளார்.

இதனால், இந்திய-சீனா இடையே சுமுக உறவு காணப்படுகிறது என்ற சீனாவின் நிலைப்பாட்டுக்கு எதிராகவே மத்திய மந்திரி தெளிவுடன் குறிப்பிட்டு உள்ளார்.


Next Story