கும்பாபிஷேகத்தில் செய்யப்படும் சடங்குகள்


கும்பாபிஷேகத்தில் செய்யப்படும் சடங்குகள்
x
தினத்தந்தி 2 Jan 2018 8:15 AM GMT (Updated: 2 Jan 2018 8:15 AM GMT)

பொதுவாக, ஆலயங்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.

அதாவது, கும்பத்தில் வைக்கப்பட்ட புனித நீரில் இறை சக்திகளை ஆவாகனம் செய்து, குறிப்பிட்ட யாகத்தின் மூலம் மந்திர உச்சாரணம் செய்து, கும்பத்திற்குள் வரவழைக்கப்பட்ட சக்தியை, கடவுள் சிலைகள் மற்றும் கோபுர கலசங்களில் நிலையாக இருக்கும்படி அபிஷேகம் செய்து பூஜைகள் நிறைவேற்றப்படும்.

கும்பம் என்பது கடவுளின் உடலாகவும், அதில் சுற்றப்பட்ட நூல் 72,000 நாடி நரம்புகளையும், உள்ளே இருக்கும் தீர்த்தம் ரத்தமாகவும், அதற்குள் போடப்பட்ட தங்கம் ஜீவனாகவும், மேலே உள்ள தேங்காய் தலைப்பகுதியாகவும், கும்பத்தின் கீழே பரப்பிய தானியம் ஆசனமாகவும் கருதப்படுகிறது.

கும்பாபிஷேகத்தின்போது செய்யப்படும் சடங்குகளில் சிலவற்றை இங்கே காணலாம்.

பாலாலயம்


கும்பம் ஒன்றை கோவிலில் உள்ள தெய்வச்சிலை அருகில் வைத்து, தர்ப்பை, மாவிலை கொண்டு மந்திரங்கள் சொல்லப்பட்டு, தெய்வ சக்தி கும்பத்திற்கு மாற்றப்படும். பின்னர், அந்த சக்தி வேறொரு இடத்தில் உள்ள மரத்தால் செய்யப்பட்ட உருவத்திற்கு மாற்றப்பட்டு, கும்பாபிஷேகம் முடியும் வரை அதற்கு பூஜைகள் செய்யப்படும்.

ஆவாகனம்


கும்பத்தில் உள்ள நீருக்குள், தெய்வ சக்திகளை வரவழைக்கச் செய்வது ‘ஆவாகனம்’ எனப்படும். கும்பத்தை கோவிலில் உள்ள தெய்வ சிலை அருகில் வைத்து, தர்ப்பை, மாவிலை ஆகியவற்றை கொண்டு மந்திரங்கள் ஓதி, பிம்பத்தில் உள்ள தெய்வ சக்தியை கும்பத்தில் எழுந்தருளச் செய்வார்கள்.

கும்பம்


யாக சாலையில் வைக்கப்படும் வெள்ளி அல்லது செம்பு குடத்தாலான கும்பம், இறைவனின் வடிவமாகவே கருதப்படும். மந்திரம், கிரியை, தியானம், ஹோமம் மற்றும் பக்தர்களின் நல்ல எண்ணங்களுடனும் எங்கும் உள்ள இறை சக்தி கும்பத்திற்குள் வரவழைக்கப்படும். கும்பாபிஷேகம் நடக்கும்போது, ஒரு கால பூஜைக்கு 64 கிரியைகள் வரை முன்னர் செய்யப்பட்டன. ஆனால் தற்போது கால அவகாசம் கருதி, முக்கியமான 13 அல்லது 12 கிரியைகள் மட்டும் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்தப் படுகிறது.


ஆசாரிய வர்ணம்


கும்பாபிஷேகத்தின் பொருட்டு கிடைக்கும் பொருட்களுக்கு பூஜை செய்யப்படுவது தன பூஜை ஆகும். அவ்வாறு கிடைக்கும் பணம் அல்லது பொருளின் ஒரு பகுதி கட்டிட வேலைக்கும், ஒரு பகுதி நித்திய, மாதாந்திர, விசேஷ நட்சத்திர பூஜை உற்சவத்துக்கும், மூன்றாவது பாகம் ஆபரணங்கள் வாங்கவும் செலவிடப்படும். கும்பாபிஷேகத்தை நடத்தும் பிரதான ஆச்சாரியரை வணங்கி, மேற்கண்ட செல்வத்தைக் கொண்டு கும்பாபிஷேகத்தை நடத்தி தர கேட்டுக்கொள்வது ‘ஆசாரிய வர்ணம்’ ஆகும்.


அனுக்ஞை


கோவில் பணிகள் நிறைவு பெற்ற பிறகு, ஒரு நல்ல நாளில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை முன்னின்று நடத்தி வைக்க தகுதியான ஒருவரை தேர்ந் தெடுப்பதை ‘அனுக்ஞை’ என்கிறார்கள். விநாயகர் சன்னிதி முன்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் கும்பாபிஷேகத்தை நடத்தித் தரவேண்டும் என விநாயகரிடம் வேண்டுவது ‘அனுக்ஞை’ ஆகும்.


பிரவேச பலி


கும்பாபிஷேகம் செய்யும் இடத்திலிருந்து எட்டு திசைகளிலும் உள்ள சகல ராட்சதர்கள் மற்றும் தேவதைகளுக்கு உணவு கொடுத்து எழுப்பி, அவர்களை வேறு இடங்களுக்கு சென்று வசிக்கும்படி வழி அனுப்புவது பிரவேச பலி ஆகும். கோவில் திருவிழா சமயங்களிலும் இதை செய்ய வேண்டுமென்று ஆகமங்கள் கூறுகின்றன.


வாஸ்து சாந்தி


வாஸ்து புருஷனால் கும்பாபிஷேக கிரியைகளுக்கு எவ்விதமான தடங்களும் நேராதவாறு, 53 விதமான தேவதைகளுக்கு பூஜை, பலி, ஹோமம் ஆகியவற்றால் சாந்தி செய்வது ‘வாஸ்து சாந்தி’ ஆகும்.

ரக்ஷா பந்தன்

‘காப்பு கட்டுதல்’ என்று இதற்கு பொருள். பூஜை செய்பவர்கள் சர்ப்ப தேவதைகளுக்கு பூஜை செய்து, மந்திரித்த மஞ்சள் கயிறை வலது மணிக்கட்டில் கட்டிக்கொள்வார்கள். கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளும் சமயத்தில், குடும்பத்தில் எதிர்பாராமல் ஏதாவது தீட்டு ஏற்படும் பட்சத்தில், காப்பு அவிழ்க்கப்படும் வரை அந்தத் தீட்டு அவர்களை பாதிக்காது என்பது ஐதீகம்.


கட ஸ்தாபனம்

‘கலசம் அமைத்தல்’ என்பது இதன் பொருள். தங்கம், வெள்ளி, தாமிரம், மண் ஆகிய ஏதாவது ஒன்றில் செய்யப்பட்ட கலசம் என்ற கும்பங்கள் பயன்படுத்தப்படும். கும்பங்களை இப்படித்தான் அமைக்க வேண்டும் என்ற வரையறைகள் உள்ளன. கும்பத்தின் மேற்புறம் நூல் சுற்றி, ஆற்று நீர் நிரப்பி, மேல் பகுதியில் மாவிலை செருகி, தேங்காய் வைக்கப்படும். எந்த தெய்வத்துக்கு கும்பாபிஷேகம் நடக்கிறதோ அந்த தெய்வத்தின் உடலாக குறிப்பிட்ட கும்பம் கருதப்படும்.


அஷ்டபந்தனம்


கும்பாபிஷேகத்தை அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் எனச் சொல்வதுண்டு. பீடத்தின்மீது வைக்கப்படும் தெய்வ திருவுருவங்கள் அசையாமல் உறுதியுடன் நிலைத்து நிற்க, கொம்பரக்கு, சுக்கான்தான், குங்குலியம், கற்காவி, செம்பஞ்சு, ஜாதிலிங்கம், தேன்மெழுகு, எருமையின் வெண்ணெய் ஆகிய எட்டுவகை மருந்துகளை கலந்து சார்த்துவார்கள். அஷ்டம் என்றால் எட்டு என பொருள். இந்த எட்டுவகை மருந்துகளை சார்த்துவதற்கே ‘அஷ்ட பந்தனம்’ என பெயர்.


மிருத்சங்கிரஹணம்

கும்பாபிஷேக விழாவிற்கு முன்னதாக அங்குரார்ப்பணம் செய்யப் படும். அதாவது நவதானியங்கள் முளைவிட்டு வளர வைக்கப்படும். அதற்காக சுத்தமான மண் எடுக்கப்பட்டு முளைப்பாலிகைகளில் வைத்து, அதற்குள் நவதானியங்களை இட்டு வைப்பார்கள். இவ்வாறு தானியங்களை வளர வைப்பது ‘மிருத்சங்கிரஹணம்’ ஆகும்.


நான்கு வகை கும்பாபிஷேகம்


கும்பாபிஷேகம் என்பது ஆவர்த்தம், அனுவர்த்தம், புனராவர்த்தம் மற்றும் அந்தரிதம் என்று நான்கு பொதுவான வகைகளாக உள்ளது.

* புதிதாக கோவிலை நிர்மாணம் செய்து, அங்கே புதிய கடவுள் சிலைகளை அமைத்து செய்யப்படுவது ‘ஆவர்த்தம்’ எனப்படும்.

* கோவில் அல்லது தெய்வ மூர்த்தங்கள் ஆகியவை வெள்ளம் அல்லது இதர இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டு, அவற்றை மீண்டும் சீரமைப்பது ‘அனுவர்த்தம்’ என்று சொல்லப்படும்.



* குறிப்பிட்ட காலம் கடந்த நிலையில் ஆலயத்தின் பழுதுகளை சரி செய்து அஷ்டபந்தன மருந்து சாற்றி, மீண்டும் புதுப்பிக்கும் முறை ‘புனராவர்த்தம்’ ஆகும்.

* கள்வர்களால் தெய்வ சிலைகள் எடுத்துச்செல்லப்பட்டு, அவற்றை மீண்டும் பிரதிஷ்டை செய்யும் முறைக்கு ‘அந்தரிதம்’ என்று பெயர்.

Next Story