புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சேலம் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சேலம் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 22 Sep 2018 11:14 PM GMT (Updated: 22 Sep 2018 11:14 PM GMT)

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சேலம் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம்,

பெருமாளுக்கு உகந்தநாள் புரட்டாசிமாத சனிக்கிழமை ஆகும். நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர். சேலம் கோட்டை அழகிரிநாதர் என்று அழைக்கப்படும் கோட்டை பெருமாள் கோவிலில் நேற்று காலை சிறப்பு அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. அதன்பின்னர் அழகிரிநாதர் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கண்ணாடி மாளிகையில் ராமர், லட்சுமணன், சீதா, ஆஞ்சநேயர் ஊஞ்சல் உற்சவ சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பின்னர் தங்கக்கவசத்தில் அருள்பாலித்த ஆஞ்சநேயர், கருடாழ்வாரை பக்தர்கள் வழிபட்டனர். இரவில் பெருமாள் வீதியுலா வந்தார். கோவிலக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள பட்டை கோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சேலம் பெரமனூர் வெங்கடேச பெருமாள் கோவிலில் மூலவர் பெருமாளுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஜாகீர் அம்மாபாளையம் வரபிரசாத ஆஞ்சநேயர் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆனந்தா இறக்கம் அருகே உள்ள லட்சுமி நாராயணசாமி கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சாமிக்கு துளசி மாலை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

சேலம் செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து அபிஷேக வழிபாடு நடைபெற்றது. செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில், அயோத்தியாப்பட்டணம் ராமர் கோவில், சின்னத்திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில், அழகாபுரம் வெங்கடேசுவரா பாலாஜி டிரஸ்ட் கோவில், உடையாப்பட்டி சென்றாய பெருமாள் கோவில், கடைவீதி வேணுகோபாலசுவாமி கோவில், நாமமலை பெருமாள் கோவில், நெத்திமேடு கரியபெருமாள் கோவில் உள்பட பல்வேறு பெருமாள் கோவில்களில் நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.

Next Story