சோதனைகளை எதிர்கொள்வது எப்படி?


சோதனைகளை எதிர்கொள்வது எப்படி?
x
தினத்தந்தி 28 Feb 2020 11:15 AM GMT (Updated: 28 Feb 2020 11:15 AM GMT)

ஒவ்வொரு மனிதனுக்கும் எப்பொழுதுமே தெளிந்த நீரோடை போன்ற வாழ்க்கை அமைந்து விடுவதில்லை. மனிதன் தன் வாழ்வில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சோதனைகளையும், வேதனைகளையும் தாங்கித்தான் தன்இலக்கை அடைய முடியும்.

இஸ்லாமிய தத்துவம், ‘மனிதர்களை எப்படி புரிந்துகொள்ள வேண்டும்’ என்று கூறும் போது, “மனிதர்கள் தம்வாழ்வில் ஏற்ற-இறக்கங்களை, மேடு-பள்ளங்களை, வறுமை-செழுமை இப்படி எல்லா நிலைகளையும் ஒருசேர கருதவேண்டும்” என்று சொல்கிறது. அதுமட்டுமல்ல இந்தநிலைகளில் எல்லாம் இறையச்சம் மேலோங்கி நிற்க வேண்டும் என்றும் போதிக்கிறது.

“ஈமான் கொண்டோம், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோம் என்பது இஸ்லாமிய இல்லத்தின் நுழைவு வாசல்மட்டுமே. அதற்குள் இருப்பதுதான் வாழ்வு நெறி தத்துவங்கள். காலை புலர்ந்ததில்இருந்து, அந்தி சாயும் வரை மனிதன் எப்படிவாழ வேண்டும் என்று ஒவ்வொரு நிலைப்பாட்டையும் செவ்வனே செய்யச் சொல்வது இஸ்லாம்.

வியாபார தர்மங்கள், அளவு நிறுவைகளில் நியாயங்கள், வட்டியில்லா வாழ்வியல், உறவுகளில் அரவணைப்பு, பக்கத்து வீட்டாரோடு பங்களிப்பு, மாற்றுமத சகோதரர்களோடு இணக்கங்கள், கற்புநெறி காத்தல், பாவங்களை தவிர்த்தல், பார்வைக்கும், கேள்விகளுக்கும், கரங்களுக்கும், எண்ணங்களுக்கும் கற்பு நெறியை நிர்ணயம் செய்தல்... இப்படிஒவ்வொரு நிலைகளிலும் தவறுகளைத் தவிர்த்து, குற்றங்கள் நிகழாது காத்துக் கொள்ளும் போது, சோதனைகள் நம்வீட்டு வாசல் கதவுகளைத் தட்டு வதற்கு சிறிது யோசனைசெய்யும். இந்த நிலைகள் மாறும் போது சோதனைகள் நம்மை சூழ்வதை தவிர்க்க முடியாது.

அருள்மறை குர்ஆன் (29:2) இதைப்பற்றி பேசும்போது, “மனிதர்கள் நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்று கூறினால் மட்டும் போதுமானது. அதனைப் பற்றி அவர்கள்சோதிக்காமல் விட்டு விடுவார்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனரா?” என்று இடித்துரைக்கின்றது.

இறைவனை நம்பிக்கை கொண்டால் மட்டும் போதுமானது என்ற நிலைமை மாற வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் நன்னெறிகளைச் சொல்லித் தந்தது மட்டுமல்ல. அவற்றை மக்களுக்கு போதிக்க தன் தூதர்களை அனுப்பினான். அந்த தூதர்களும் இறைவனின் சோதனைகளுக்கு தப்பவில்லை.

“யாரும் என்னைப்போல் சோதிக்கப்படவில்லை என்று சொல்லாத அளவிற்கு அத்தனை சோதனைகளையும் அனுபவித்தவர்கள் முகம்மது நபி (ஸல்) அவர்கள்.

பாவங்கள் அற்ற சமூகத்தை நாம் ஒருபோதும் அழிப்பதில்லை என்றும்அல்லாஹ் கூறுகிறான். மனிதர்கள் செய்யும் பாவங்களால் மட்டுமே அவர்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்கிறது திருக்குர்ஆன் (29:40).

“அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் செய்து கொண்ட பாவத்தின் காரணமாகவே நாம் பிடித்துக் கொண்டோம்”

எனவே நாம் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டால், உடனே நம்மை சுய பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும். நம்மிடம் உள்ள பாவங்கள் என்ன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அதனை அறிந்து தவிர்க்கும் போது சோதனைகள் விலகி விடும்.

சோதனைகள் இருவகைப்படும். தனிப்பட்ட சோதனைகள், ஒட்டுமொத்த சோதனைகள். தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு அல்லது ஒரு குடும்பத்திற்கு ஏற்படும் சோதனைகள் ஒரு வகை. ஒரு இனத்திற்கு, ஒரு நாட்டிற்கு ஏற்படுவது ஒட்டு மொத்த சோதனை ஆகும்.

இந்த சோதனைகளில் இருந்து விடுபட ஒரே வழி, இறைவனிடம் கை ஏந்துவது தான். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

“உண்மை நம்பிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களை பொறுமையுடன் சகித்துக் கொண்டு தங்கள் இறைவனையே நம்பி இருப்பார்கள்”. (29:59)

“நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்”. (2:153)

“பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான்” என்று திருக்குர்ஆனில் பல இடங்களில் பரவலாக சொல்லப்பட்டுள்ளது. பொறுமை என்ற உன்னத நிலையை அவ்வளவு எளிதாக அடைந்துவிட முடியாது. அதற்கு அபரிமிதமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் எனும் போது, வேறு யாரால் நமக்கு கெடுதியை ஏற்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்குமானால் பொறுமையை எளிதாக கையாளலாம்.

“லவ்ஹுல் மஹ்ஃபூல்” என்ற ஏட்டில் எழுதப்பட்ட விதியையே மாற்றி விடும் சக்தி பிரார்த்தனைகளுக்கு இருக்கிறது என்ற அண்ணலாரின் பொன்மொழி ஒன்றிருக்கும்போது அதில் நம்பிக்கை கொள்ளாமல் நம் மனங்கள் மற்ற விஷயங்களில் அலை பாய்வதேன்? நம் சோதனைகள் நீக்கப்பட வேண்டும் என்றால் அல்லாஹ்விடம் நாம் சரண் அடைவது ஒன்றே வழி.

“பூமியிலும் வானத்திலும் நீங்கள் அவனை இயலாமையில் ஆக்கக்கூடியவர்கள் அல்லர். அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றக்கூடிய எந்த ஒரு பொறுப்பாளரும் உதவியாளரும் உங்களுக்கு இல்லை” (திருக்குர்ஆன் 29:22).

எனவே, நம் பிரார்த்தனைகளைஅல்லாஹ் ஒருவனிடமே சமர்ப்பிப்போம். சோதனைகள் நீங்கப்பெற்று வெற்றி அடைவோம். அல்லாஹ் நம் பாவங்களை மன்னித்து அருள் புரிவானாக, ஆமின்.

மு.முகமது யூசுப், உடன்குடி.

Next Story