சித்திரை மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை மறுநாள் திறப்பு


சித்திரை மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை மறுநாள் திறப்பு
x

நடை திறப்பையொட்டி ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். அதேபோல மண்டல மகரவிளக்கு சீசன், பங்குனி உத்திர திருவிழா நாட்கள், விஷூ, ஓணம் பண்டிகை உள்ளிட்ட விசேஷ நாட்களிலும் கோவில் நடை திறக்கப்படுவது வழக்கம்.

அதன்படி சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை நாளை மறுநாள்(புதன்கிழமை) திறக்கப்படுகிறது. அன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.

11-ந் தேதி அதிகாலை 5 மணி முதல் வழக்கமான பூஜைகளுடன், 18-ந் தேதி வரை 8 நாட்கள் நெய்யபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ர கலச பூஜை, புஷ்பாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.

முன்னதாக 14-ந் தேதி விஷூ பண்டிகையொட்டி சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது. நடை திறப்பையொட்டி ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக கேரள அரசின் சிறப்பு பஸ்கள் பத்தனம்திட்டா, கோட்டயம், செங்கன்னூர், திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, எர்ணாகுளம், பாலக்காடு உள்பட முக்கிய பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்பட உள்ளது.


Next Story