பாண்டிய மன்னனுக்கு ஜடாமுடியுடன் காட்சி அளித்த சடையப்பர்


பாண்டிய மன்னனுக்கு ஜடாமுடியுடன் காட்சி அளித்த சடையப்பர்
x

5 நிலைகளை கொண்ட கோபுரத்துடன் கூடிய சிவசைலம் கோவிலில் சிவசைலநாதருக்கும் அம்பாளுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன.

தென்காசி-அம்பாசமுத்திரம் மார்க்கத்தில் உள்ள ஆழ்வார்குறிச்சியில் இருந்து மேற்கே 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சிவசைலநாதர் கோவில். மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள கடனா அணைக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த கோவில் வரலாற்று சிறப்புமிக்க ஆலயம் ஆகும்.

பாண்டிய மன்னனுக்கு சிவபெருமான் ஜடாமுடியுடன் காட்சி அளித்த அதிசய சம்பவம் சிவசைலம் திருத்தலத்தில் நடந்தது. இதற்காக ஈசன் ஒரு திருவிளையாடலையே நடத்தினார்.

மணலூர் என்ற ஊரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்த சுதர்சன பாண்டியன் என்ற மன்னன் அடிக்கடி சிவசைலநாதர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து இறையருள் பெற்று வந்தான். அப்படி ஒரு நாள் மன்னன், சாமி கும்பிடுவதற்காக கோவிலுக்கு வந்தபோது கடனா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மன்னனால் ஆற்றை கடந்து தென்கரையில் உள்ள கோவிலுக்கு செல்ல முடியவில்லை.

எனவே வடகரையில் நின்றபடியே சிவசைலநாதரை மனதில் நினைத்து வேண்டினான். அவனது வேண்டுதலுக்கு ஈசன் செவிசாய்க்கவே சிறிது நேரத்தில் வெள்ளம் வடியத்தொடங்கியது. வெள்ளம் குறைந்ததும் மன்னன் ஆற்றை கடந்து தென்கரையில் உள்ள கோவிலுக்கு சென்றான்.

மன்னன் கோவிலுக்கு வருவதற்குள் நடை சாத்தப்பட்டு விட்டது. மன்னனின் 'திடீர்' வருகையை கண்டு திடுக்கிட்ட அர்ச்சகர், மன்னனை மகிழ்விக்கும் பொருட்டு, கோவிலின் பிரதான நாட்டிய மங்கைக்கு பிரசாதமாக வழங்கி, அவள் தலையில் சூடியிருந்த மலர்மாலையை பெற்று மன்னனுக்கு கொடுத்துவிட்டார்.

சுவாமியை தரிசிக்க இயலாவிட்டாலும் அவருக்கு சூட்டிய மலர்மாலையையாவது தரிசிக்கும் பாக்கியம் கிடைத்ததே என்று மகிழ்ந்த மன்னன் சுதர்சன பாண்டியன், அந்த மாலையை பயபக்தியுடன் வாங்கி பரவசத்துடன் கண்களில் ஒற்றிக் கொண்டான்.

அப்போது அதில் தலைமுடி இருப்பதை கண்டு, அபசகுனமாக கருதிய மன்னன், ''ஈசனுக்கு சூடிய மலர்மாலையில் தலைமுடி எப்படி வந்தது?'' என்று கோபமாக கேட்டான்.

இதனால் பயந்துபோன அர்ச்சகர், ''ஈசனுக்கு சடைமுடி உண்டு. மலர்மாலையில் காணப்பட்டது சுவாமியின் முடிதான்'' என்று ஒரு பொய்யைக் கூறி சமாளித்தார்.

இதை நம்பாத அரசன், ''அப்படியானால் நான் அடுத்த முறை கோவிலுக்கு வரும்போது அந்த சடை முடியை தரிசிக்க ஏற்பாடு செய்யுங்கள்'' என்று கட்டளையிட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.

இதனால் அர்ச்சகரின் நிலைமை இருதலைக்கொள்ளி எறும்பானது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தன்னை காப்பாற்றி அருளுமாறு சிவசைலநாதரிடம் வேண்டி பிரார்த்தனை செய்தார். அவரது நிலைமையை கண்டு மனமிறங்கிய ஈசன் அசரீரியாக, ''சுதர்சன பாண்டியனை சோதிக்கவே யாம் இவ்வாறு செய்தோம். அவனுக்கு மலர்மாலை பிரசாதம் தந்த உம்மை நிச்சயம் காப்பாற்றுவேன். கருவறையின் மூன்று பக்கங்களிலும் சாளரங்கள் அமைப்பாயாக'' என்று கூறிவிட்டு மறைந்தார்.

இதைத்தொடர்ந்து, கருவறையின் வலது, இடது மற்றும் பின் பக்கங்களில் சிறிய சாளரங்கள் (துவாரங்களுடன் கூடிய கல் ஜன்னல்) அமைக்கப்பட்டன. நாட்கள் உருண்டோடின.

ஏற்கனவே சொன்னது போல் சில நாட்களுக்கு பின் மன்னன் சுதர்சன பாண்டியன் கோவிலுக்கு வந்தான். அப்போது அர்ச்சகரின் வேண்டுகோளின்படி, கருவறையில் சுவாமிக்கு பின்னால் உள்ள துளையின் வழியே மன்னன், சிவசைலநாதரை தரிசனம் செய்தான். அர்ச்சகர் காட்டிய தீப ஒளியில் ஈசன் ஜடாதாரியாக மன்னனுக்கு காட்சி அளித்தார். இறைவனின் தோற்றத்தை கண்டு மெய்சிலிர்த்த மன்னன், தன் தவறை மன்னிக்கும்படி மனமுருக வேண்டி இறையருள் பெற்றான்.

இந்த நிகழ்வின் காரணமாகவே, பக்தனுக்கு ஜடாமுடிதாரியாக சிவபெருமான் காட்சியளித்த சிறப்புடைய தலமாக இந்த கோவில் விளங்குகிறது. அத்துடன் ஜடாமுடியுடன் காட்சியளித்த சிவபெருமான், சடையப்பர் என்றும் அழைக்கப்படுகிறார்.

இப்போதும் இந்த கோவிலில் கர்ப்பகிரகத்தின் மூன்று பக்கங்களிலும் சாளரங்கள் இருப்பதை காணலாம். பின் பக்கம் அமைந்துள்ள சாளரத்தின் பின்னால் உள்ள கோவிலின் மதில் சுவரில் ஒரு துளை இருப்பதையும் காண முடியும்.

5 நிலைகளை கொண்ட கோபுரத்துடன் கூடிய இந்த கோவிலில் சிவசைலநாதருக்கும் அம்பாளுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. ஈசனின் இடப்பக்கம் அம்பாள் சன்னதி அமைந்துள்ளது.

தேவார பாடல் பெற்ற இந்த கோவிலின் தல விருட்சமாக கடம்ப மரம் விளங்குகிறது.

கோவிலின் வலதுபுறத்தில் மணிமண்டபத்துடன் கூடிய படித்துறையும், அதன் அருகே மூலிகை தோட்டமும் உள்ளது. பக்தர்கள் படித்துறையில் இறங்கி ஆற்றில் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்கிறார்கள். பல்வேறு இடங்களில் இருந்தும் தினசரி ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

கோவில் அமைந்துள்ள ஆற்றின் தெற்கு கரை பகுதி சிவசைலம் என்றும், வடக்கு கரை பகுதி அம்பாள் பெயரில் கல்யாணிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. கல்யாணிபுரத்தில் இருந்து ஆற்றை கடந்து சிவசைலம் செல்ல பெரிய பாலம் கட்டப்பட்டு உள்ளது.

இயற்கை எழில் சூழ்ந்த சோலைவனம் போன்ற பகுதியில் இந்த கோவில் அமைந்து இருப்பதால் கடனா அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

கோவிலின் எதிரே திருக்கல்யாண வசந்த மண்டபம் உள்ளது. இங்குள்ள கோசாலையில் பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன.

ஆண்டுதோறும் பங்குனி மாத இறுதியில் நடைபெறும் பிரமோற்சவம் இங்கு நடைபெறும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த கோவில் தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும் வழிபட்ட தலம் என்பதால் அதிர்வலைகள் நிறைந்த தலமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக இங்கு திருமணம் மற்றும் 'மணிவிழா'க்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இந்த கோவில் உள்ளது.


Next Story