பக்தருக்கு கிடைத்த மரியாதை


பக்தருக்கு கிடைத்த மரியாதை
x

திருப்பதி ஏழுமலையானுக்கு மண் சட்டியில் நைவேத்தியம் படைக்கப்படுகிறது.

திருப்பதியில் பீமன் என்ற மண்பாண்ட தொழிலாளி வசித்து வந்தார். இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக் கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார். அதனால் சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையானின் கோவிலுக்கு போக நேரம் இருக்காது. போனாலும் பூஜை முறையும் தெரியாது. ஏதாவது ஒரு சனிக்கிழமையில் ஆலயத்திற்குச் சென்றால், "பெருமாளே, நீயே எல்லாம்" என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார்.

ஒருமுறை அவரது மனதில் ஒரு எண்ணம் உதித்தது. பெருமாளைப் பார்க்க கோவிலுக்கு போக நேரமில்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று யோசித்தார். களிமண்ணில் ஒரு சிலை வடித்தார். அதற்கு பூ வாங்கும் அளவுக்கு அவரிடம் பணம் இல்லை. எனவே தான் மண்பாண்டம் செய்யும்போது சிதறிய களிமண்ணை ஒன்று சேர்த்து, அவற்றில் சிறிய சிறிய பூக்களை செய்து அதைக் கோர்த்து பெருமாளின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார்.

அந்த பகுதியை ஆட்சி செய்த தொண்டைமான் என்ற அரசனும் பெருமாள் பக்தர். அவர், சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலை ஒன்றை ஏழுமலையானுக்கு அணிவிப்பார்.

ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் வந்தார். பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது. 'பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ?' என குழப்பத்தில் அங்கிருந்து மன்னன் சென்றுவிட்டார். அன்று இரவு அவரது கனவில் தோன்றிய பெருமாள், நடந்த விவரங் களைச் சொன்னார்.

மறுநாள் காலையிலேயே பீமனின் குடிசைக்குச் சென்ற மன்னன், அவருக்கு வேண்டிய பொருளுதவியைச் செய்வதாகச் சொல்லியும், பீமன் அதை ஏற்கவில்லை. அவர் செய்த பெருமாள் பணிக்காக, இறுதி காலத்தில் வைகுண்டம் அடைந்தார். அவரை கவுரவிக்கும் வகையில்தான், இப்போதும் திருப்பதி ஏழுமலையானுக்கு மண் சட்டியில் நைவேத்தியம் படைக்கப்படுகிறது.


Next Story