ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்: பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா ராஜஸ்தான்?


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்: பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா ராஜஸ்தான்?
x
தினத்தந்தி 15 April 2019 11:30 PM GMT (Updated: 15 April 2019 11:30 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன.

மொகாலி,

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 ஆட்டத்தில் ஆடி 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. பஞ்சாப் அணி தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் முறையே மும்பை, பெங்களூரு அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. மும்பைக்கு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் ஆட்டம் இழக்காமல் 100 ரன்னும், கிறிஸ் கெய்ல் 63 ரன்னும் அடித்ததால் பஞ்சாப் அணி 197 ரன்கள் குவித்தது. இதேபோல் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் கெய்ல் ஆட்டம் இழக்காமல் 99 ரன்கள் சேர்த்ததால் பஞ்சாப் அணி 173 ரன்கள் எடுத்தது. இரு ஆட்டங்களிலும் வலுவான ஸ்கோர் எடுத்தாலும் பஞ்சாப் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களின் நிலையற்ற பந்து வீச்சால் அந்த அணி ரன்களை விட்டுக்கொடுத்து தோல்வியை தழுவ நேர்ந்தது. எனவே தனது பந்து வீச்சில் உள்ள குறைபாடுகளை பஞ்சாப் சரி செய்ய வேண்டியது அவசியமானதாகும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று இருக்கிறது. மும்பை அணிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 188 ரன் இலக்கை எட்டிப் பிடித்து அசத்தல் வெற்றி பெற்றது அந்த அணிக்கு புத்துணர்ச்சியை அளித்து இருக்கும். அந்த ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் 89 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். ரஹானே, சஞ்சு சாம்சன் ஆகியோரும் அணியின் வெற்றிக்கு கைகொடுத்தனர். காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் ஆடாத பென் ஸ்டோக்ஸ் இன்றைய ஆட்டத்தில் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வருகை ராஜஸ்தான் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.

பஞ்சாப் அணிக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்தில் 14 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வி கண்டது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க ராஜஸ்தான் அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் வெற்றி பாதைக்கு திரும்ப பஞ்சாப் அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.


Next Story