2வது டி20 கிரிக்கெட்: 6 விக்கெட்டுகள் வித்தியாத்தில் இந்தியா வெற்றி


2வது டி20 கிரிக்கெட்: 6 விக்கெட்டுகள் வித்தியாத்தில் இந்தியா வெற்றி
x

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

லக்னோ,

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்குமிடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 0-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்த நிலையில் 2வது டி20 போட்டி லக்னோவில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக டிவோன் கான்வேயும், பின் ஆலனும் களமிறங்கினர். இருவரும் தலா 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மார்க் சாப்மேன் 14 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியின் பந்துவீச்சில் நியூசிலாந்து வீரர்கள் ரன்களை குவிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் அர்ஸ்தீப் சிங் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்த ஜோடியில் சுப்மன் கில் 11 (9) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து இஷான் கிஷன் 19 (32) ரன்களும், அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 13 (18) ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்ததாக சூர்யகுமார் யாதவுடன், வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் எதிர்முனையில் பேட்டிங் செய்து கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ் ரன் எடுக்க முயன்றபோது வாஷிங்டன் சுந்தர் 10 (9) ரன்கள் எடுத்திருந்தநிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து சூர்யகுமார் யாதவுடன், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார்.

இந்த இருவரும் மெதுவாக ஆட்டத்தினை வெளிப்படுத்தி விக்கெட்டுகள் விழாத வகையில் ரன்களை சேர்த்தனர்.

இறுதியில் சூர்யகுமார் யாதவ் 26 (31) ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 15 (20) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி 19.5 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் சோதி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-1 என்ற புள்ளிக்கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.


Next Story